கல்வி என்று வரும்போது, கருத்து வேறுபாடு,அரசியல் பேதங்களை மறந்து நாம் செயற்பட வேண்டும்

சுஐப் எம்.காசிம்  

 

 முஸ்லிம் சமூகம் கல்வி நிலையில் உயர் நிலை அடைய வேண்டுமானால் அந்த சமூகத்தைச் சார்ந்த அரசியல்வாதிகள், தனவந்தர்கள் மற்றும் கல்வியில் ஆர்வங்கொண்ட சிவில்சார் அமைப்புக்கள் ஆகியவை ஒரே நேர்கோட்டில், ஒருமித்து பயணிக்க வேண்டியது இன்றியமையாத்தென அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் 2014 – 2015 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த பரிசளிப்பு விழாவில் இன்று (13/10/2016) பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

14696919_658841420948573_415138869_n_fotor

கல்லூரியின் அதிபர் திருமதி.சிஹானா ஏ.ரஹீம் தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில், கண்டி மாவட்ட கல்வித் திணைக்கள முஸ்லிம் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ. நசார், கண்டி வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் பௌசுல் அமீன், கண்டி லைன் பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவர் அப்ஸல் மரைக்கார் மற்றும் பாடசாலை முன்னாள் அதிபர்கள் ஆகியோர் கெளரவ அதிதிகளாகப் பங்கேற்றனர்.

அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

வர்த்தகத் துறையிலே நமது சமூகம் மேம்பாடான நிலையில் இருக்கின்றது. கண்டி மாவட்டத்தின், கண்டி, அக்குரணை மற்றும் சில பிரதேசங்களில் வாழும் வர்த்தகர்கள், வெளிநாடுகளுடனான வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறப்பதை நாம் காண்கின்றோம். 

எனினும், கல்வித்துறையிலே நாம் இன்னும் பின்னடைவிலேயே இருக்கின்றோம். புள்ளி விபரங்கள் இதனை எடுத்துக்காட்டுகின்றது. இது தொடர்பில் நாம் தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் பாடசாலைகளின் தரவுகளையும், புள்ளி விபரங்களையும் திரட்டியிருக்கின்றோம். அது தொடர்பில் இன்னும் பல ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றோம். 

பெருமானார் (ஸல்) அவர்களுக்கு “வஹி” இறங்கப்பட்ட வேளை “ஓதுவீராக, படிப்பீராக” என்றே முதலில் அறிவிக்கப்பட்டது. எனினும், அந்த இறை அறிவிப்பைப் பின்பற்றி, கல்வியில் எத்துணை தூரம் நாம் முன்னேறி இருக்கின்றோம் என்பதை, நமது மனச்சாட்சியைக் கேட்டுப்பார்த்தால் தெரியும். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அண்மையில் நான் சந்தித்த போது, முஸ்லிம் சமூகத்தின் கல்விப் பின்னடைவையும், நாடளாவிய ரீதியில் ஒப்பீட்டு அளவில் இந்தச் சமூகம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதையும் சுட்டிக்காட்டி,  அது தொடர்பில் நாங்கள் பெற்றுக்கொண்ட தரவுகளையும் தெரியப்படுத்தினோம்.

இதன் அடுத்த கட்டமாக இன்னும் ஓரிரு மாதங்களில் முஸ்லிம் அரசியல்வாதிகள், ஜம்இய்யதுல் உலமா, சூரா கவுன்சில், சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் ஆகியோரை ஒன்றிணைத்து, நாம் பெற்றுக்கொண்ட தரவுகளை, அறிக்கையாக உத்தியோகபூர்வமாகக் கையளிப்போம். முஸ்லிம் சமூகத்தின் கல்வியை மேம்படுத்துவதற்கான ஒரு செயலணியை உருவாக்கும் எமது முயற்சிக்கு உருக்கொடுக்கும் நோக்கிலேயே, இந்தப் பணியை மேற்கொள்ளவுள்ளோம். இறைவன் உதவியால் நாம் இதில் வெற்றியடைவோம். 

கல்வி என்று வரும்போது, நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை, அரசியல் பேதங்களை மறந்து செயற்பட வேண்டும். சமூகத்தின்பால் அக்கறைகாட்டுவோர் அவ்வாறு செயற்படுவார்கள் என்றும் நாம் உறுதியாக நம்புகின்றோம்.

இன்று முஸ்லிம் பாடசாலைகள் பலவற்றில் மும்மொழிக் கல்வி நடைமுறையில் இருந்து வருகின்றது. எனினும், அந்தப் பாடசாலைகள் தமிழ் மொழிக் கல்வியிலேயே அதியுயர் பெறுபேறுகளைத் தோற்றுவிக்கின்றன. 

ஆனால், பதியுதீன் மகளிர் கல்லூரி மும்மொழிகளிலும் சிறந்து விளங்குவதை நாம் காண்கின்றோம். இந்தப் பாடசாலையிலேயே முதலாம் ஆண்டிலிருந்து பதின்மூன்றாம் ஆண்டு வரை கல்விகற்ற, பழைய மாணவியான, இளம் வயதுடைய அதிபரின் திறமையான செயற்பாடுகளால், பாடசாலையின் அடைவு மட்டம் முன்னோக்கி நகர்கின்றது.  

இந்தச் சந்தர்ப்பத்தில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகளுக்கு நான் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றேன். 

சீனா போன்ற நாடுகளில் சுயமொழிக் கல்வியினால், அந்த நாடு அமெரிக்கா, ஜெர்மனி போன்ற வல்லரசுகளுக்குச் சவாலாக அபிவிருத்தித் துறையிலும், பொருளாதார முன்னேற்றத்திலும் பெரும் வளர்ச்சி கண்டுள்ளதை நான் இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

நமது நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் பல்வேறு துறைகளிலும், உயர்கல்வி கற்கும் சுமார் 5௦௦௦ – 6௦௦௦ வரையிலான முஸ்லிம் மாணவர்கள் இருக்கின்றனர். இவர்கள் படிப்பை முடித்துவிட்டு வெளியேறும் போது, அரச தொழில்களிலும், சிறிய தொழில்களிலுமே நாட்டம் காட்டுகின்றனர். பென்ஷனை மையமாகக்கொண்டே அவர்கள் தொழில் தேடுகின்றனர். இருக்கின்ற காலத்தில் ஏதோ தமது வாழ்க்கையை கழித்துவிடலாம் என்றே இவர்கள் நினைக்கின்றனர். இந்த நிலை மாறி, சொந்தக் காலிலே, சுயதொழிலில் முன்னேற வேண்டுமென்ற ஆசை வந்தால் நமது சமூகம் விடிவு காணும். 

எமது கட்சியைப் பொறுத்தவரையில் சமுதாயத்தின் கல்விக்காக நாம் அதீத கரிசனை கொண்டு செயற்படுகின்றோம். அதற்கென ஒரு கட்டமைப்பை வகுத்துள்ளோம். பல்கலைக்கழக வாய்ப்புக் கிடைக்காதவர்களை வெளிநாடுகளுக்கு மருத்துவ மற்றும் இன்னோரன்ன துறைகளில் கற்பதற்கென புலமைப் பரிசில்களையும் நாம் வழங்கி வருகின்றோம். பெற்றோர்கள் கடையப்பம் விற்று, அதன்மூலம் கிடைக்கப்பெற்ற வருமானத்தினால் கஷ்டமான நிலையிலும் கல்வி கற்று, சிறப்புச் சித்தி பெற்ற மாணவியொருவர், எனக்கு அண்மையில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். “நான் வெளிநாட்டில் மருத்துவபீடத்தின் இறுதியாண்டில் இருக்கின்றேன். அதற்கு நீங்களே வழியமைத்துத் தந்தீர்கள்” என்று அதில் குறிப்பிட்டிருந்தார். 

உண்மையிலேயே, இந்தக் கடிதத்தைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இவ்வாறானவர்கள் தமது படிப்பை முடித்துவிட்டு, சமுதாயத்துக்கு பயனுள்ள பணிகளை ஆற்ற வேண்டுமென நாம் விரும்புகின்றோம்.

எத்தனையோ ஏழை மாணவர்கள் காலை உணவு இல்லாமல், வெறும் வயிற்றுடன் பாடசாலை செல்வதை நாங்கள் காண்கின்றோம். இதனை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளிலும் நாம் ஈடுபட்டு வருகின்றோம். 

அடுத்தாண்டு பட்ஜெட் நிதியில் இந்தப் பாடசாலைக்கான விடுதி உட்பட இன்னும் சில குறைபாடுகளை நான் நிவர்த்தி செய்து தருவேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

விழா முடிந்த பின்னர் அமைச்சர் றிசாத் பதியுதீன் பாடசாலை விடுதிக்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்தார்.