அம்பாறை முஸ்லிம்களினதும், கொழும்பு முஸ்லிம்களினதும் கல்வி வளர்ச்சியில் பாரிய ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது :றிசாத்

 

ஆசிரியர் தொழில் புனிதமானது. மகிமையானதும் கூட. இந்தக் கண்ணியமான ஆசிரியர் தொழிலை புனிதமாக மதித்து, மாணவர்களின் கல்விக்கு அர்ப்பணிப்புடன், ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டுமென்று அமைச்சர் றிசாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். 

14580580_10206744239194159_775027080_n_fotor

கொழும்பு, கன்ஸா சர்வதேச பாடசாலையில் அதிபர் அன்வர்தீன் தலைமையில் இன்று காலை (06/10/2016) இடம்பெற்ற, ஆசிரியர் தின விழாவில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் மேலும் கூறியதாவது,

ஆசிரியர்கள் தமது கடமைகளையும், பொறுப்புக்களையும் சரிவர மேற்கொள்ள வேண்டும். கற்பித்தலில் தமது பிள்ளைகளைப் போன்று, மாற்றார் பிள்ளைகளையும் எண்ணிச் செயற்படும்போது, ஆசிரியர்களின், பிள்ளைகளையும் இறைவன் சமுதாயத்துக்கு பயனுள்ளவர்களாக உருவாக்குகின்றான். இதை நாங்கள் நடைமுறை வாழ்க்கையில் கண்ணாரக் காண்கின்றோம். 

14593622_10206744236194084_1202974704_n_fotor

பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர்களும், குறிப்பாக தாய்மார்களும் கவனஞ்செலுத்த வேண்டும். அவர்களை ஒழுக்கமுள்ளவர்களாக வளர்ப்பதும், கண்காணிப்பதும் தாய்மார்களின் கட்டாயக் கடமையாகின்றது. 

கொழும்பு மாவட்ட முஸ்லிம்களைப் பொறுத்தவரை, கல்வித் தரத்திலே அவர்கள் பின்னடைவாக இருப்பதை புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இலங்கையில் முஸ்லிம்களை அதிகமாக வாழும் மாவட்டமாக அம்பாறையும், கொழும்பும் திகழ்கின்றது. எனினும், அம்பாறை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியிலும், கொழும்பு மாவட்ட முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியிலும் பாரிய ஏற்றத்தாழ்வு காணப்படுவதை நான் மிகவும் வேதனையுடன் கூற விரும்புகின்றேன். 

கொழும்பு மாவட்ட முஸ்லிம் பெற்றோர்கள், தமது பிள்ளைகளின் கல்வி முயற்சிக்கு ஊக்கமளிக்க வேண்டும். இதன் மூலமே நாம் ஏனைய மாவட்டங்களுடன் போட்டியிட முடியும். 

பிள்ளைகள் எமக்கு இறைவனால் அருளப்பட்ட சிறந்த கொடையாகும். எனவே, இஸ்லாமிய வரையறைக்குள் மார்க்கப் பற்றுள்ளவர்களாக அவர்களை வளர்த்தெடுப்பதுடன், சமுதாயத்துக்கு பயனுள்ளதாகவும் மாற்ற வேண்டும். மறுமை நாளில்  இறைவன் பெற்றோர்களிடம் தமது பிள்ளைகள் பற்றி கேள்வி எழுப்புவான். இந்த விடயங்களை கருத்திற்கொண்டு தனது பிள்ளைகளை ஒழுக்க சீலர்களாக வளர்த்தெடுப்பது பெற்றோர்களின் கடமையாகும். 

14569193_10206744239834175_973994164_n_fotor

இன்று கொழும்பிலே சர்வதேச பாடசாலைகள் அதிகரித்துள்ள போதும், பல பாடசாலைகளில் இட நெருக்கடி இருப்பதை நாம் காண்கின்றோம். கன்ஸா சர்வதேச பாடசாலை, கொழும்பு மாவட்ட சர்வதேச பாடசாலைகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து, கல்வியிலே சிறந்த பெறுபேற்றை ஈட்ட வேண்டுமென நான் விரும்புகின்றேன்.

அமைச்சரின் ஊடகப்பிரிவு