தமிழக அரசை கலைக்க வேண்டும் – மூத்த வழக்கறிஞர்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த தகவலை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞர் ஒருவர் குடியரசு தலைவரிடம் மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு ஒரு வாரம் தாண்டிவிட்டது. அவர் சிகிச்சை பெறும் புகைப்படங்கள் வெளியாகவில்லை என்றபோதிலும், காவிரி தொடர்பாக அவர் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்ட போட்டோவும் வெளியாகாதது எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதியை அறிக்கை வெளியிடும் அளவுக்கு தூண்டியது. 

நேற்று கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதா உடல் நலம் குறித்து உரிய தகவலை வெளியிட வேண்டும். ஆளுநர் தலையிட வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார்.

ஜனாதிபதிக்கு மனு 

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞராக உள்ள ரேஹன் எஸ். பெல் என்பவர், இதுகுறித்து குடியரசு தலைவருக்கு ஒரு மனு அனுப்பியுள்ளார். 

தமிழக ஆளுநரிடமிருந்து, ஜெயலலிதா உடல் நிலை குறித்த அறிக்கையை கேட்டு பெற வேண்டும் என்று ஜனாதிபதிக்கு அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

எய்ம்ஸ் டாக்டர் 

எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அல்லது தனியார் டாக்டர்கள் மூலம், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து, அதன் விவரங்களை மக்கள் அறிந்து கொள்ள வசதி செய்ய வேண்டும் என்றும் ஹேரன் எஸ்.பெல் தனது மனுவில் கோரியுள்ளார்

குடியரசு தலைவர் ஆட்சி 

முதல்வர் ஜெயலலிதா, பணியாற்றும் செயல் திறனோடு உள்ளாரா என்பதை ஆளுநர் மூலம் குடியரசு தலைவர் அறிந்து கொள்ள வேண்டும். அப்படி, அவருக்கு செயல் திறம் இல்லை என தெரியவந்தால், சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி தமிழக அரசை கலைக்க வேண்டும். குடியரசு தலைவர் ஆட்சியை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் அறிக்கை அவசியம் 

ஒருவேளை இந்த மனுவை குடியரசு தலைவர் பரிசீலித்தாலும், முதலில் ஆளுநரிடம் அறிக்கை கேட்காமல் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த முடியாது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கியுள்ளதாக தெரிந்தால்தான் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த முடியும். ஆனால் முடங்கிவிட்டதாக யாரும் குற்றம் சொல்ல முடியாத அளவிற்கு அரசு சார்பில் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.