சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டு : றிசாத்

இன்றைய சிறுவர்களே நாளைய நற் பிரஜைகள்!

 

கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் சிறுவர் தின வாழ்த்துச் செய்தி.

சிறுவர்களை நாளைய சொத்துக்களாகக் கருதி, அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென அமைச்சர் றிசாத் பதியுதீன் விடுத்துள்ள சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 

rishad riz

உலகளாவிய ரீதியில் 1979 முதல் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டு, வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. எனவே,சிறுவர்களது எதிர்காலம் மற்றும் அவர்களது உரிமைகளை வலியுறுத்துவது தொடர்பில் நாம் கூடிய கவனம் செலுத்த வேண்டும். 

ஒவ்வொரு பெற்றோரும், குடும்பத்தவர்களும், பொதுமக்களும் சிறுவர்களது உரிமைகளை மதித்துப் பாதுகாக்கும் பட்சத்திலேயே, சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க முடியும். சிறுவர் துஷ்பிரயோகங்களும் சிறுவர் ஊழியர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் சிறுவர்கள் தொடர்பில், நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. போர் முடிவுற்ற போதும் உளரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் ஏராளம். உறவுகளை இழந்து, பராமரிப்பற்று இருக்கும் அவர்கள், பொருளாதார நெருக்கடிகள், சமூகப் பிரச்சினைகள் எனப் பலவற்றுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். நல்லாட்சி அரசாங்கத்தில் இந்த சிறுவர்களை இனங்கண்டு, அவர்களுக்கான நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இன்றைய சிறுவர்களே நாளைய நற் பிரஜைகள் என கருத்திற்கொண்டு நாம் செயற்பட வேண்டும். சிறுவர்களை பாதுகாத்து அவர்களின் உரிமைகளை மதித்து அவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக பொறுப்புடன் செயற்படுவது, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜை மீதும் கடமையாகும் என அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.