உலகில் தலைசிறந்த நாடாக இலங்கையை கட்டியெழுப்புவது தனது எதிர்பார்ப்பு: ஜனாதிபதி

14370452_10154391124106327_1591998481856963158_n

தேசிய சிந்தனையை அடிப்படையாக கொண்டு சர்வதேச ஆதரவு மற்றும் ஒத்துழைப்புடன் உலகில் தலைசிறந்த நாடாக இலங்கையை கட்டியெழுப்புவது தனது எதிர்பார்ப்பு என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். 

ஐக்கிய நாடுகள் சபையின் 71வது கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்கா சென்றுள்ள, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (22) அதிகாலை ஐ.நா கூட்ட தொடரில் தனது உரையினை நிகழ்த்தினார். 

இதன் போது இவ்வாறு கூறிய ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றும் போது, 

இலங்கை நாட்டின் ஜனாதிபதியாக இக் கூட்டத்தொடரில் கலந்துக்கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

இலங்கை எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு ஏழ்மையில் இருந்து விடுதலை அடையும் ஆண்டாக பெயரிடப்பட்டுள்ளதுடன், அரசியல் பொருளாதார மீள் உருவாக்கம் தொடர்பில் நாம் முன்னுரிமை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

புதிய அரசாங்கம் உருவாகி 20 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இலங்கை மக்களிடம் காணப்பட்ட பயம் மற்றும் அச்சத்துடன் வாழ்ந்த சூழலை அகற்றி சுதந்திரமாகவும் ஜனநாயகத்துடனும் வாழும் சூழலை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. 

அத்துடன், மக்களுக்கு வேண்டிய சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையினை உலகில் உள்ள மிகவும் சந்தோசமான நாடுகளினுள் ஒன்றாக மாற்றி மக்களுக்கு கையளிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளோம் என்றார். 

சமூகத்தில் இன்று ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் சமூகத்தை உருவாக்குவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். 

30 வருட காலமாக மிலேச்சத்தனமான பயங்கரவாத யுத்தத்தினால் முகங்கொடுத்த நாடு என்ற வகையில் பெற்று கொண்ட அனுபவங்கள் ஊடாக இலங்கையில் மீண்டும் ஒரு முறை யுத்தம் நிகழாமல் தடுப்பதற்கும், நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கும், தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவும் அரசு என்ற ரீதயில் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இதற்கான ஆசிர்வாதத்தை பல நாடுகளில் இருந்து கௌரவத்துடன் எதிர்பார்ப்பதாகவும் ஜ.நா பேரவையில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

அத்துடன் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்கு வழங்கிய விஷேட ஒத்துழைப்புக்களக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.