சுதந்திர கட்சியின் தலைவர் பதவி மஹிந்தவிற்கு வழங்கப்படவுள்ளது ?

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகிக்காத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில், அந்த கட்சியின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஸவுக்கு கட்சியின் தலைமைத்துவத்தை வழங்கி உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர், தேவையென்றால், கட்சியின் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அந்த அமைச்சர் கூறியுள்ளார்.

அத்துடன் கட்சியின் மத்திய செயற்குழுவின் அதிகாரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் தக்கவைத்திருப்பது முக்கியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தினால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி படுதோல்வி அடையும் என பேச்சுவாரத்தையின் போது கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்த போதே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.