பட்டுப்போன முருங்கையை மைதானத்தில் நாட்டிவிட்டு விக்கட்டுக்களை வீழ்த்தியதாக பெருமிதப்படும் மு.கா

 

rauff hakeem rishad

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்ட மருதூர் அன்சாருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாதெனவும்,அவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்புரிமை கொண்டவரல்ல, அம்பாறை மாவட்டக் கொள்கைபரப்புச் செயலாளர் என்ற பதவி அவருக்கு எச்சந்தர்பத்திலும் வழங்கப்படவில்ல எனவும் அக்கட்சியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

அகில இலங்கை மக்கள் காங்கிஸில் நாடளாவிய ரீதியில் கட்சி அமைப்பாளர்களை நியமிக்கும் அதிகாரம், அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப்எம்.பிக்கு மாத்திரமே உரித்துடையது எனவும், அவர் எந்த சந்தர்பத்திலும் கட்சியின் உறுப்புரிமை இல்லாத மருதூர் அன்சாருக்கு, இந்தப் பதவியை வழங்கவில்லை எனவும் கட்சியின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

மருதூர் அன்சார் 2006 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தவர். பின்னர் 2011 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு ஆக 43 வாக்குகளையே பெற்றார்.

தேசிய பட்டியல் முரண்பாட்டினால் கட்சியிலிருந்துவெளியேறிய மக்கள் காங்கிரஸின் முன்னாள் செயலாளர்நாயகம் வை.எல்.எஸ்.ஹமீதுடன் நெருக்கமான உறவை இவர் கொண்டிருக்கிறார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும், முன்னாள் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீதுக்கும் இடையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள உறவின் அடிப்படையில், மருதூர் அன்சார் முஸ்லிம் காங்கிரசுடன் மீண்டும் இணைந்திருக்கிறார். 

அகில இலங்கை மக்கள் காங்கிரசைப் பொறுத்தவரையில்,உறுப்புரிமை இல்லாத, மக்கள் செல்வாக்கில்லாத எந்தவொரு தனிநபரும், எந்தக் கட்சியில் இணைந்தாலும் அதனை ஒரு பொருட்டாகக் கட்சி கருதுவதில்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எகிறிப்போயுள்ள உள்வீட்டு முரண்பாடுகளை மறைப்பதற்காக, எங்கேயோ இருக்கும் சிலரை தேடிப்பிடித்து, பூமாலை போட்டு அவர்கள் றிசாத்தின் கட்சிக்காரர்கள் எனக்கூறி வருவது இப்போது வழக்கமாகிவிட்டது,  

அந்தவகையில் இப்போதும்  “றிசாத்தின் இன்னுமொரு விக்கட் வீழ்ந்திருக்கின்றது” என்று சமூகவலைத்தளங்களில் போலிப் பிரசாரத்தை மேற்கொண்டு வருவது, அக்கட்சின் கையாலாகாத தனத்தையும், வங்குரோத்தையுமே தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. 

விறகுக்குக் கூட பயன்பாடாத பட்டுப்போன முருங்கைக் கட்டையை எடுத்துவந்து, மைதானத்தில் நாட்டிவிட்டு தாங்களே பந்தெறிந்து, விக்கட்டுக்களை வீழ்த்திவிட்டதாக இவர்கள் தம்பட்டம் அடிக்கின்றனர்.

மொத்தத்தில் அம்பாறை மாவட்டதில் அமைச்சர் றிசாத்தின் எழுச்சி, இவர்களை குலைநடுங்க வைத்துள்ளது என்றும்அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.