வருடத்திற்கு 38 இலட்சம் மக்கள் மதுபாவனையினால் மரணமடைகின்றனர் – உலக சுகாதார அமைப்பு

வருடத்திற்கு உலகில் 38 இலட்சம் மக்கள் மதுபாவனையினால் மரணமடைவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் செயற்பாட்டாளர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், வருடமொன்றிற்கு மதுபாவனையினால் இலட்சக்கணக்கான மக்கள் பலியாகின்றனர். அதிலும் இலங்கையில் 15 வயதிற்குட்பட்டோர் இதிகமாக மதுபாவனையால் பாதிக்கப்படுவதாக ஆய்வறிக்கையின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த வருடத்தில் பெண்களின் மதுபாவனை 1.2 வீதமாக இருந்ததாகவும், தற்போது 2.2 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் மதுபாவனையை ஒரு கலாச்சாரமாக பின்பற்றி வருகின்றனர். இலங்கை தற்போது உலகமயப்படுத்தப்பட்டு வருகின்றது. 

இதனால் நாட்டு மக்கள் ஏனைய நாடுகளைப் பார்த்து அவர்களுடைய கலாச்சாரங்களைப் பின்பற்றி வருவதாகவும் இதனாலேயே இலங்கையில் மதுபாவனை அதிகரித்துள்ளதாகவும் செயற்பாட்டாளர் கூறினார்.

போதைப்பொருள் பாவனைகளும் நாட்டில் தற்போது அதிகரித்து வந்துள்ளதாகவும். பெரும்பாலும் சிறுவர்களே இதற்கு அடிமையாகுவதாகவும் உலக சுகாதார அமைப்பின் செயற்பாட்டாளர் இதனை தெரிவித்தார்.