அமைச்சர் ஹசனலியின் புதல்வரைப்பற்றி அமெரிக்க தூதரகத்திலிருந்து…..!

Colombo US Embassy

 கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து வொஷிங்டனில் உள்ள வெளியுறவு அமைச்சு தலைமைக் காரியாலயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள இரகசிய இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இலங்கை அரசியல்வாதிகளின் வாரிசுகள் குறித்து எழுதப்பட்டு உள்ளது.

பெரும்பாலான அரசியல்வாதிகளின் வாரிசுகள் ஒழுக்கம் குறைந்தவர்களாக இதில் காட்டப்பட்டு உள்ளனர்.

குறிப்பாக பாலியல் ஒழுக்கம் அற்றவர்கள் என்று சித்திரிக்கப்பட்டு உள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் அமைச்சர்களான மேர்வின் சில்வா மற்றும் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா ஆகியோரின் புதல்வர்கள் பாலியல் விடயங்களில் மிகவும் மோசமானவர்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. அதே போல இந்நாள் அமைச்சர் ராஜித சேனாரட்ணவின் புதல்வர் பாலியல் சர்ச்சையில் சிக்கி உள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பாலியல் விடயங்களுக்கு அப்பால் அடிதடிகள், கடத்தல்கள் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளிலும் அரசியல்வாதிகளின் வாரிசுகள் ஈடுபட்டு வந்திருக்கின்றனர் என்று சொல்லப்பட்டு உள்ளது. முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மீண்டும் உதாரணம் ஆக்கப்பட்டு உள்ளார். முன்னாள் அமைச்சர் ஏ. எச். எம். பௌசியின் மகனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்று கூறப்பட்டு உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர்களில் ஒருவர் ரக்பி விளையாட்டு வீரர் ஒருவரின் படுகொலையோடு சம்பந்தப்பட்டு உள்ளார் என்று வலுவாக நம்பப்படுகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே நேரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர், சுகாதார மற்றும் சுதேச வைத்திய துறை இராஜாங்க அமைச்சர் ஹசன் அலியின் புதல்வர் போன்று விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரே ஒழுக்கமானவர்களாக இதில் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் புதல்வர் வெகுவிரைவில் நேரடியாக அரசியலில் குதிக்கக் கூடும் என்றும் இதில் உள்ளது.

அமைச்சர் ஹசன் அலியின் புதல்வர் அலி சப்ரி குறித்து நல்லபடியாக எழுதப்பட்டு இருக்கின்றது. இவர் இது வரை எவ்வித சர்ச்சையிலும் மாட்டுப்படாதவர், பிரித்தானியாவில் உயர் கல்வி பயின்றவர், நிதானம் ஆனவர், கடுமைப் போக்காளர் அல்லர், எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடக் கூடும் என்று எழுதி இருக்கின்றனர்.