சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமனம்

பிரபல சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் றிசாத் பதியுதீனின் சிபாரிசுக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவருக்கான நியமனக் கடிதத்தை அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று (04/07/2016) கைத்தொழில்,வர்த்தக அமைச்சு அலுவலகத்தில் வைத்து கையளித்தார். 

சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் அனுராதபுர மாவட்டம் கனேவல்பொலவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் கல்வி கற்று, பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்று சட்டத்தரணியானார். 

rusthy habeeb

 

கொழும்பு, பல்கலைக்கழக சட்ட முதுமாணித்துறை கல்வியின் இறுதிநிலையில் தற்போது இருந்து வருகின்றார். இவர் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிருவாகத் துறையில் முதுமாணிப் பட்டம் பெற்றவர். ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பு முகாமைத்துவ கற்கை நெறியிலும் தேர்ச்சி பெற்றவர். 

உயர் நீதிமன்றத்தில் சட்டத்துறையில் சுமார் 12 வருடங்களுக்கு மேலான அனுபவம் பெற்ற ருஸ்தி, இலங்கை புலமைச்சொத்து சட்ட ஆலோசனைக்குழுவின் அங்கத்தவர். இவர் இலங்கை முதலீட்டுச்சபை மற்றும் வர்த்தகம் சார்ந்த பல நிறுவனங்களிலும் சட்டத்தொழில் சார்ந்த  அனுபவம் கொண்டவர்.  

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரான இவர், முன்னாள் அதிபர் மர்ஹூம் யு.எல்.ஹபீப், ஆயிஷா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வரும் ஆவார்.