அமெரிக்காவில் 4 குழந்தைகளை கத்தியால் குத்தி கொன்ற கொடூர தாய்

அமெரிக்காவின் டென்னிசி மாநிலம் மெம்பிஸ் புறநகர்ப்பகுதியில் உள்ள கோல்ப் மைதானம் அருகில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு வசித்து வந்த ஒரு பெண்மணி, தனது குழந்தைகள் 4 பேரையும் குத்திக்கொன்றதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அந்தப் பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நடந்த குடியிருப்பில் என்ன நடந்தது என்பது பற்றி அங்கு வசிக்கும் மக்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்த அதிகாரிகள், குழந்தைகளின் வயது விவரங்களை வெளியிடவில்லை.

மேலும், இந்த சம்பவம் அதிர்ச்சி தரும் ஒரு தீய செயல் என்று ஷெல்பி கவுண்டி ஷெரிப் பில் ஓல்ட்ஹாம் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால், பெண் தனது குழந்தைகளை கொலை செய்ததாக அவர் குறிப்பிட்டு கருத்து தெரிவிக்கவில்லை.

பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலை சம்பவம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த பொதுமக்கள், அதிகாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.