முஸ்லிம்களுக்கெதிரான வீண்பழிகளைக் கவனமாகக் கையாள வேண்டிய தருணம் இது

rizad rishad

முஸ்லிம் சமூகத்தின் மீதான வீண் பழிகளையும், அபாண்டங்களையும் நாம் பொறுமையாகவும், அவதானத்துடனும் கையாள்வதன் மூலமே அவற்றை வெற்றிகரமாக முறியடிக்க முடியும் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலய மைதானத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை (24/06/2016) இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர், இப்தாரில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றினார். 

அமைச்சர் இங்கு மேலும் கூறியதாவது,

இன்று முஸ்லிம் சமூகம் பல்வேறு இன்னல்களையும், கஷ்டங்களையும் எதிர்கொள்கின்றது. இனவாதிகள் நம் சமூகத்தின் மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தி வருகிறார்கள். பள்ளிவாசல்களை அதிகளவிலே முஸ்லிம்கள் நிர்மாணிக்கின்றார்கள் என்று போலிப் பிரசாரங்களை  முன்னெடுத்து, சகோதர இனங்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டுவதற்கான திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

unnamed-2_Fotor

 

இஸ்லாம் எப்போதுமே சகோதரத்துவத்தையும், சமாதானத்தையுமே வலியுறுத்தி வரும் மார்க்கமாகும். நாம் ஏனைய இனங்களுடன் பரஸ்பரம் நல்லுறவுடனேயே வாழ்ந்து வருகிறோம். இனியும் அவ்வாறுதான் வாழ முற்படுகின்றோம். 

இஸ்லாமியர்களாகிய நாம் எமக்குள் எத்தகைய பேதமைகள் இருந்தாலும் ஐக்கியமாகவும், ஒற்றுமை உணர்வுடனும் வாழ்ந்தால், இனவாதிகள் தமது எண்ணத்தை இலகுவில் நிறைவேற்ற முடியாது.

இன்று நமது சமூகம் பலவிதமான பிரச்சினைகளையும், சவால்களையும் சந்தித்து வருகின்றது. இறைவனின் துணையுடன் இவற்றை சரி செய்வதற்கு  ஈமானிய அடிப்படையில் எம்மைத் தயார்படுத்த வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். 

இஸ்லாமிய அடிப்படையில், பெருமானாரின் போதனைகளைப் பின்பற்றி நாம் வாழ்ந்து வந்தால், இந்தப் பிரச்சினைகளை இலகுவில் முறியடிக்க முடியும் என அமைச்சர் கூறினார்.

13530496_609204082578974_814072989_n_Fotor