பாராளுமன்றத்திற்கோ அல்லது மாகாண சபைக்கோ செல்லப்போவதில்லை : பஷீர்

basheer cegu dawood slmc

 

பிரதிநிதித்துவ அரசியல் முறையில் இருந்து இன்று முதல் முழுமையாக விலகிக்கொள்வதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

இனிவரும் காலங்களில் பாராளுமன்றம், மாகாண சபை உள்ளிட்ட எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் பஷீர் சேகுதாவூத் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு கட்சியிலும் தேசிய பட்டியலின் மூலமோ அல்லது எதிர்காலத்தில் தேர்தல் சட்டங்களில் ஏற்படும் மாற்றங்களால் அல்லது வேறு ஏதேனும் முறையில் பாராளுமன்றத்திற்கோ அல்லது மாகாண சபைக்கோ மக்கள் பிரதிநிதியாக செல்லப்போவதில்லையென பஷீர் சேகுதாவூத் குறிப்பிட்டுள்ளார்.

1981 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை தான், பயணித்த அரசியல் பயணம் தொடர்பில் பஷீர் சேகுதாவூத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமகால அரசியல் சூழலில் முஸ்லிம் தேசிய அடையாள அரசியல் பெரும் நெருக்கடியை சந்திக்க ஆரம்பித்துள்ளதாகவும் இந்தப் பின்புலத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இருப்பும், அதன் தலைமைகளின் நம்பகத்தன்மையும் கட்சியின் உயிர்ப்பும், தூய்மையும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இன்றைய முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் அனைவரும் சமூக ஈடேற்றம் பற்றி சிந்திக்காது, பதவிகளையும்,சலுகைகளையும் குறிவைத்தே அரசியலில் ஈடுபடுகிறார்கள் என்ற விமர்சனம் சமூகத்தினால் முன்வைக்கப்படுவதாக பஷீர் சேகுதாவூத் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி எந்தவொரு அரசியல் கட்சியிலும் எவரும் நேர்கோட்டை வரைய முற்படுகின்ற போதெல்லாம், பதவிகளை நாடிய மூன்றாம்தர நடவடிக்கைகளாக அவை சோடித்துக் காட்டப்பட்டு நேரிய மாற்றங்களுக்கான முயற்சிகள் தோற்கடிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் புறவிமர்சனங்களை சுயவிமர்சனங்களாக மாற்றிக் கொண்டு சோடனைக் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபட்டு தனிப்பட்ட அரசியல் நம்பகத்தன்மையை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் பிரதிநித்துவ அரசியலில் இனியொருபோதும் ஈடுபடுவதில்லை என்ற முடிவுக்கு வந்தாக பஷீர் சேகுதாவூத் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமகால முஸ்லிம் அரசியலில் பதவிகளைப் பெறும் இலக்குகளற்ற ஒரு பாத்திரத்தின் மூலம் செயலாற்ற முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதிநித்துவ அரசியல்வாதியாக அன்றி ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒரு கடை நிலை உறுப்பினராகவேனும் இருந்து கட்சியை தூய்மைப்படுத்தும் பணியில் தீவிரமான அரசியல் செயல்பாட்டாளராக தனது எஞ்சிய வாழ் நெடுகிலும் இருக்கப் போதவாக அக்கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் தனது ஆசிரியராக திகழ்ந்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் மற்றும் மூன்று தடவைகள் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்ல வாய்ப்பளித்த கட்சியின் தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீ்ம், ஈரோஸ் இயக்க நிறுவுனர் மறைந்த இரத்தின சபாபதி, அரசியல்ஆசான் தோழர் பாலகுமார் மற்றும் தான் போட்டியிட்ட 7 தேர்தல்களில் வாக்களித்த மக்களுக்கும் பஷீர் சேகுதாவூத் தனது அறிக்கையின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.