உலகளவில் 65.3 மில்லியன் மக்கள் இடம்பெயர்வு : ஐ.நா. தகவல்

000c0eb7-642_Fotor

 

இன்று உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, ஐ.நா.வின் அகதிகளுக்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

2015-ம் ஆண்டில் மட்டும் உலகளவில் 65.3 மில்லியன் மக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இது 2014-ம் ஆண்டை விட 5.8 மில்லியன் அதிகமாகும். மக்களின் இடம்பெயர்வுக்கு வன்முறை, உள்நாட்டு போர் மற்றும் வறுமை முக்கிய காரணமாக உள்ளது. 

உலகின் மொத்த மக்கள் தொகை 7.349 பில்லியன் ஆகும். இதன்படி ஒவ்வொரு 113 பேரில் ஒருவர் உள்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளுக்கோ அகதியாக இடம்பெயர்கிறார். 

அதிகபட்சமாக பாலஸ்தீனத்தை சேர்ந்த 5 மில்லியன் பேர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் சிரியா (4.9 மில்லியன்), ஆப்கானிஸ்தான்(2.7 மில்லியன்), சோமாலியா(1.1 மில்லியன்) ஆகிய நாடுகள் உள்ளன. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியான சூழ்நிலை குறித்து அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் தலைவர் பிலிப்போ கிராந்தி கூறுகையில், “உலக நாடுகள் அகதிகள் பிரச்சனையில் மட்டும் அல்லாமல், ஒட்டுமொத்த மனித இனத்தின் நன்மையை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதுதான் இன்று நம் முன் உள்ள மிகப் பெரிய சவால்” என்று தெரிவித்துள்ளார்.