பிரித்தானியாவில் மீண்டும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை நிலையம் எச்சரிக்கை

பிரித்தானியாவில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்நாட்டு வானிலை மையம் அறிவித்துள்ளது.

பிரித்தானியாவில் கடந்த வாரம் பெய்த கனமழையில் பெரும் சேதாரங்கள் ஏற்பட்டது மட்டுமில்லாமல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

மழையின் பாதிப்பிலிருந்து மக்கள் திரும்புகிற இத்தருணத்தில் வானிலை மையம் இன்று திடீரென புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை மற்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், பிரித்தானியாவில் மீண்டும் வெள்ளம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக, மேற்கு மற்றும் கிழக்கு இங்கிலாந்து, யார்க்ஷைர், மிட்லாண்ட்ஸ் மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால், இப்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

எதிர்வரும் கனமழை மணிக்கு சுமார் 15 முதல் 25 மில்லி மீற்றர் வரை மழை பதிவாகும் என்றும், நாளை (புதன்கிழமை) 25 மில்லி மீற்றருக்கு மேலும் பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.