கூட்டமைப்பு முன்வைத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும்: ஹிஸ்புல்லாஹ்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில்  நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புவேளை விவாதம் நடத்தி அப்பகுதிகளில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை எதிர்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளிக்கொண்டு வந்திருந்தது. இது தொடர்பில் நல்லாட்சி அரசு விசேட கவனம் செலுத்தி அவற்றுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 
hisbullah hizbullah
கடந்த வெள்ளிக்கிழமை வடகிழக்கு மாகாணங்களில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஒத்திவைப்புவேளை விவாத பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்பித்த எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், அதன் பின்னர் ஆற்றிய உரை மிகவும் முக்கியமானது. வடகிழக்கு மக்கள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகளை அவர் இதன் போது சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன், இவற்றுக்குத் தீர்வினைப் பெற்றுக் கொடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சம்பந்தன் ஐயா வலியுறுத்தியிருந்தார். 
அவர் தனது உரையில்,
வடகிழக்கு மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, இராணுவ இடையூறுகள், அபிவிருத்தி மற்றும் தொழில் வழங்கப்படாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளை அவர் பேசியிருந்தார். 
அதுமட்டுமல்லாது, இதன் போது ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களினால் வடகிழக்கில் உள்ள மேலும் பல பிரச்சினைகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தன. இவை பேச்சளவில் மாத்திரம் இருக்காது அவற்றுக்குத் தீர்வினைப் பெற்றுக் கொடுக்க அரசு விசேட கவனம் செலுத்த வேண்டும். 
கிழக்கு மாகாணத்தை பிரதிநிதி என்றவகையில் நான் கடந்த காலங்களில் அப்பகுதிகளில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தேன். குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கல்விப் பிரச்சினை, பெண்கள் முகம் கொடுக்கும் பிரச்சினை, மீள்குடியேற்றம், அரச தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் குறிப்பிடலாம்.
எனவே, வடகிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க நல்லாட்சி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – என்றார்.