ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் வங்குரோத்து

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் வங்குரோத்து தனத்தின் மற்றுமொரு வெளிப்பாடே கைத்தொழில், வர்த்தக அமைச்சின் நிறுவனங்கள், தனது கட்சியின் எம்.பியான அலிஸாஹிர் மௌலானாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மேற்கொண்டுவரும் பொய்யான பரப்புரையாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், தேசிய இளைஞர் மகளிர் விவகார இன ஒருமைப்பாட்டு பணிப்பாளருமான டாக்டர் ஹில்மி மஹ்ரூப் தெரிவித்தார்.

hilmy mahroof acmc

 

பொய்களாலும் புரட்டுக்களாலும், போலியான வாக்குகளாலும் தனது ஆதரவாளர்களையும், மக்களையும் ஏமாற்றி வரும் இந்தக் கட்சி, மக்களை பிழையான வழியில் திசை திருப்பி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரரு அமைச்சுக்கும் மேற்பார்வை எம்.பிக்களை நியமித்து, அதில் சிரேஷ்டமானவர்களை மேற்பார்வை தலைவராக நியமிப்பது என்ற பிரித்தானிய நடைமுறையை அடியொட்டியதாக, நமது நாட்டிலும் நடைமுறைப்படுத்தும் இந்தத் திட்டத்தின் அடிப்படையிலேயே ஒவ்வொரு அமைச்சுக்கும் மேற்பார்வை எம்.பிக்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ்வரும் ஒரு தொகுதி நிறுவனங்களின் மேற்பார்வை தலைவராக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டார். 

ஜனாதிபதியினதும், பிரதமரினதும் கீழ்வரும் அமைச்சுக்களில் கூட இவ்வாறான மேற்பார்வைக் குழுக்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறானா மேற்பார்வைக்குழுக்கள் அமைச்சுக்களின் கீழுள்ள நிறுவனங்களுக்கு ஆலோசனைகளை வழங்க முடியுமே தவிர,திணைக்களங்களின் நிர்வாகத்தில் எந் விதமான தலையீடுகளையும் மேற்கொள்ள முடியாது என்ற அடிப்படையையே விளங்கிக்கொள்ள முடியாத முஸ்லிம் காங்கிரஸின் கூஜா தூக்கிகள், அமைச்சர் றிசாத்தின் கீழ்வரும் அத்தனை நிறுவனங்களும் தமது கைக்குள்  வந்துவிட்டதாக கதையளக்கின்றனர்.

 

அரசியலில் அரிச்சுவடியே தெரியாத இந்தக் கூஜா தூக்கிகள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத்தின் அரசியல் எழுச்சியையும், அவரின் மக்கள் ஆதரவையும் பொறுக்க முடியாமல் கனவிலும் உளறத் தொடங்கியுள்ளனர்.

“முஸ்லிம்களின் சாரதியும் நானே, நடத்துனரும் நானே” எனக்கூறி வந்த மு.கா தலைமைக்கு சரி சமனாக வளர்ந்துள்ள, மக்கள் காங்கிரஸின் தலைமையில் கொண்ட காழ்ப்புணர்வின் வெளிப்பாடே இவ்வாறான முயற்சிகளாகும்.

இவ்வாறான மேற்பர்வைக் குழுவின் தலைவர்களாக ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக்கட்சி, மக்கள் ஐக்கிய முன்னனி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றைச் சார்ந்த எம்.பிக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளமையை இந்த முட்டாள் காங்கிரஸ்காரர்களுக்கு நான் எத்தி வைக்க விரும்புகின்றேன். 

அதே போன்று, மலேசிய புதிய தூதுவரை அமைச்சர் ஹக்கீம் பாராளுமன்ற அமைச்சரின் காரியாலயத்தில் சந்தித்து கொண்டிருந்த வேளை, அநுராதபுர மக்களின் குடிநீர் பிரச்சினை தொடர்பில் அங்கு எடுத்துரைக்க சென்ற இஷாக் எம்.பி பின்னர் அந்தப் பிரமுகர்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வைத்து, இஷாக் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துவிட்டதாகவும், மக்கள் காங்கிரஸின் விக்கட் வீழ்ந்துவிட்டதாகவும் அரசியல் வியாபாரம் நடத்தத் தொடங்கியுள்ளனர். 

றிசாத் கட்சியைச் சேர்ந்த எம்.பி முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துவிட்டதாக அப்பட்டமான பொய்களைப் பரப்பி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்றனர்.

கட்சி அரசியல் வளர்ப்பதற்கு எத்தனையோ நல்ல வழிமுறைகள் இருக்கும் போது, இவ்வாறான குறுக்குப்புத்திகளை கையாள்வதை என்னவென்றுதான் நாம் கூறுவது? இவ்வாறு டாக்டர் ஹில்மி மஹ்ரூப் தெரிவித்தார்.