ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதன் மூலமே சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும் :முசலியில் ரிஷாட்

சுஐப் எம் காசிம்

ஒழுக்கமான மாணவர் சமூகத்தை கட்டியெழுப்ப ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டுமென்றும் பாட நேரங்களில் அநாவசியமாக பொழுதைக்கழிக்கக் கூடாதெனவும் நேற்று (05) தெரிவித்தார்.

image-2_Fotor
முசலிப்பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தி மற்றும் புத்தளத்தில் மன்னார் கல்வி வலயத்தின் இணைப்புப் பாடசாலைகளாக இயங்கும் அதிபர் ஆசிரியர்கள் எதிர் நோக்கும் கஷ்டங்கள் தொடர்பில் முசலி மகா வித்தியாலத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இதில் மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளர்  திருமதி செபஸ்தியனும் கலந்து கொண்டார். 
image-3_Fotor
அமைச்சர் இங்கு கூறியதாவது,
ஆசிரியர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள  கடமைகளை சரியாகச் செய்ய வேண்டும். இறைவனுக்குப் பொருத்தமாக நடக்க வேண்டும். பாடசாலைகளுக்குள்ளே விதண்டா வாதங்களையும் அரசியல் கதைகளையும் கதைத்து காலத்தை விரயமாக்கக் கூடாது. இதனால் மாணவர்களின் கல்வியே பாழடையும்.
 
மாணவர்களை இனங்காணும் பண்பு அவர்களிடம் வளர வேண்டும். பாட ஆயத்தங்களை மேற்கொண்டு விட்டு கற்பிப்பதால் மாணவர்கள் கிரகிப்பதற்கு
இலகுவாக அமையும். 
ஆசிரியர்கள் அதிபருடன் ஏற்படும் சிறு சிறு முரண்பாடுகளை பேசித் தீர்ப்பதை விடுத்து எடுத்த எடுப்பிலே மேலதிகாரிகளிடம் முறையிடும் பழக்கத்தை கைவிட வேண்டும்.  
ஒரு பாடசாலையில் எவ்வளவு தான் வளங்கள் நிறைந்திருந்தாலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினால் தான் மாணவர்களை கல்வியில் நல்ல அடைவு மட்டத்தை அடைய முடியும்.
மன்னார் மாவட்டத்தில் மீள் குடியேற்றம் நடைபெற்றுள்ள இடங்களில் அமைந்துள்ள பாடசாலைகளில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. ஆசிரியர் தட்டுப்பாடு, கதிரை மேசைப் பற்றாக்குறை, நீர்த்தட்டுப்பாடு, போக்குவரத்துப் பிரச்சினை இவ்வாரான இன்னோரன்ன பிரச்சினைகளை மாணவர்கள் எதிர்நோக்குகின்றனர். முடிந்தவரையில் இவற்றை நிவர்த்திப்பதற்கு நான் முயற்சிகளை மேற்கொள்கின்றேன்.
கடந்த காலங்களில் கல்விச்சமூகத்தின் பிரச்சினையைத் தீர்க்க நாம் பட்ட கஷ்டங்கள் ஏராளம். முசலிப்பிரதேசத்தில் நாலாம் கட்டையிலிருந்து மரிச்சுக்கட்டி வரை அமைந்துள்ள அத்தனைப் பாடசாலைகளையும் நாம் மீளக்கட்டியெழுப்பியுள்ளோம். 
முசலியின் வரலாற்றில் முன்னரெல்லாம் நீங்கள் மாடிக்கட்டிடங்களைக் கண்டிருக்க மாட்டீர்கள். வானளாவ உயர்ந்து நிற்கும் பாடசாலைக் கட்டிடங்கள்  வானத்திலிருந்து குதித்தவையல்ல. வெளிநாடுகளிடமும் உள் நாட்டுப் பரோபகாரிகளிடமும் நாம் கெஞ்சிப்பெற்றவை. எனினும் நீங்கள் என் மீது நன்றியுணர்வு பாராட்ட வேண்டுமென்று நான் கூற வரவில்லை. சமூகத்தின் மீதான பற்றுதலினால் எனது அரசியல் வாழ்வில் பல்வேறு கஷ்டங்களின் மத்தியில் உங்களுக்கு உதவுகின்றேன். 
image-4_Fotor
எனக்கெதிராக எத்தனையோ விமர்சனங்கள். காடுகளை அழிப்பதாக பல்வேறு வழக்குகள். எல்லாவற்றையும் எதிர்கொண்டு தனி மனிதனாக நின்று போராடி வருகின்றேன். எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் மீறி மக்கள் பணியாற்றும் சக்தியை இறைவன் தந்துள்ளான். 
அதிபர், ஆசிரியர்களான நீங்கள் பாடசாலைப்பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக நேசியுங்கள். நல்ல ஆசிரியர்களினதும் அர்ப்பணிப்பான அதிபர்களினதும் பிள்ளைகள் இன்று நமது சமூகத்திலே உயர்ந்த அந்தஸ்தில் டாக்டர்களாக, எஞ்சினியர்களாக, கணக்காளர்களாக இருப்பதை நாம் காண்கின்றோம். 
எனவே ஊரார் பிள்ளைகளை நல்ல முறையில் கற்பித்தால் உங்கள் பிள்ளை உயர்ந்த நிலைக்கு வரும் என்பதே யதார்த்தமாகும் என்று தெரிவித்தார்.