மீதமுள்ள 300 உம்றா யாத்திரிகள் நோன்புக்கு முன் அனுப்பப்படுவர் – ஹிஸ்புல்லாஹ்

DSC_0047_Fotor
நாடாளாவிய ரீதியில் முஅத்தீன்கள் மற்றும் இமாம்களுக்கான இலவச உம்றா வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனத்தெரிவித்த ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மீதமுள்ள மேலும் 300 உம்றா யாத்திரிகள்  ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ள நோன்புக்கு முன்னர் உம்றாவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா ஹிரா பவுன்டேஷன் ஏற்பாட்டில் 55 வயதுக்கு மேற்பட்ட முஅத்தீன்கள் மற்றும் இமாம்கள் 500 பேருக்கு இலவச உம்றா  வேலைத்திட்டத்தில் நாடாளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 100 பேர் கொண்ட இரண்டாம் குழு நேற்று புதன்கிழமை உம்றா  கடைமகளுக்காக மக்கா நோக்கி புறப்பட்டது. அவர்களை தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் அலுவல்கள் அமைச்சர் அப்துல் ஹலீம், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் பொறியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வழியனுப்பி வைத்தனர். 
DSC_0061_Fotor
பின்னர், இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:-
“இதுவரைக் காலமும் உம்றா  அல்லது ஹஜ் கடமையை செய்யாத உலமாக்கள் இருப்பார்களாயின் அவர்களுக்கு உம்றா  ஏற்பாடுகளை செய்து கொடுக்க ஹிரா பவுன்டேஷன் முன்வந்துள்ளது. இச்சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். தெரிவு செய்யப்பட்ட 500 பேர்களில் முதல் 100 பேர் கொண்ட குழு அண்மையில் தமது கடமைகளை நிறைவு செய்து நாடு திரும்பியிருந்தது. 
இரண்டாவது குழு இன்று  மக்கா நகர் நோக்கி புறப்படுகின்றது. மீதமுள்ளவர்கள் நோன்புக்கு முன்னர் அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்நிகழ்வில் அமைச்சர் ஹலீம் கலந்து கொண்டதை வரவேற்கின்றோம்” – என்றார்.