புதிய அரசாங்கத்தின் முயற்சியால் மீன் ஏற்றுமதி தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்

mahintha amaraweera

 

இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு மீனை ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்திருந்தது.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் விதிக்கப்பட்ட இந்த தடையை நீக்கிக்கொள்ள புதிய அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தது. 

கடந்த சில வருடங்களுக்கு மேலாக விதிக்கப்பட்டிருந்த குறித்த தடை, இன்று நடைபெற்ற செய்மதி தொழிநுட்பம் வாயிலான இருதரப்பு பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தால் நீக்கிக்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் மீன்சார் உற்பத்திகளின்போது சர்வதேச தர நிர்ணயம் பேணப்படுவதில்லை என தெரிவித்து, இலங்கையின் மீன் மற்றும் மீன்சார் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதிக்கு கடந்த 2014ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், குறித்த தடை அமுலுக்கு வந்தது. இதனால், மீன் ஏற்றுமதியால் கிடைத்த வருமானத்தில் இலங்கை பாரிய பின்னடைவை எதிர்கொண்டிருந்தது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பேச்சு வார்த்தியினைத் தொடர்ந்து அந்த தடை விலக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.