வட மாகாண முதலமைச்சரை கைது செய்யுமாறு கோரிக்கை

c.v. vigneswaran

 

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிங்கள பௌத்த அமைப்பான சிங்கள ராவய அமைப்பு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து தனியான அலகு ஒன்றை உருவாக்க வேண்டுமென முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்தின் அடிப்படையில், கைது செய்ய வேண்டுமென கோரப்பட்டுள்ளது. சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வட மாகாண முதலமைச்சர் அரசியல் அமைப்பினை மீறிச் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க காட்டிய முனைப்பை பிரிவினைவாத சக்திகளை இல்லாதொழிக்கவும் காட்டியிருந்தால் இன்று எவ்வித பிரச்சினையும் இருந்திருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.