சீனா சென்றடைந்த பிரதமருக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவை சென்றடைந்துள்ளதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் நேற்று சீனாவிற்கு புறப்பட்டுச் சென்றிருந்தார். 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

சீன வெளிவிவகார துணை அமைச்சர் கொங் சூவான் யூ மற்றும் சீனாவிற்கான இலங்கை தூதுவர் கலாநிதி கருணாசேன கொடிதுவக்கு ஆகியோர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க  மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோரை பெய்ஜிங் கெப்பிட்டல் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்றனர். 

விமான நிலையத்திலிருந்து விசேட வாகனத் தொடரணி ஒன்றின் மூலம் ஹோட்டலுக்கு பிரதமர் உள்ளிட்ட குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.