சம்பூர் மின் உற்பத்தி நிலையம் நாட்டுக்கு அவசியம் தேவைப்படுகின்றது – அமைச்சர் ரஞ்சித்

ranjith siyamb
சம்பூர் அனல்மின் உற்பத்தி நிலையம் அமைப்பதில் பின்னிற்க மாட்டோம். இதில் காணப்படுகின்ற தடைகளையும் சவால்களையும் வெற்றி கொண்டு இதனை அமைத்தே தீருவோமென மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

“மின்தடை” தொடர்பில் ஒருவருக்கொருவர் சுட்டு விரலைக் காட்டிக் கொண்டிருக்காது எதிர்காலத்தில் கூட்டுப் பொறுப்புடன் செயல்பட உறுதி பூணுவோமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் 

நாட்டின் மின்சார தேவை அதிகரித்துள்ளது. எனவே மின் உற்பத்தி நிலையங்கள் மேலும் மேலும் தேவைப்படுகிறது. இவ்வாறானதோர் நிலையில் “சம்பூர்” அனல்மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். எனவே இதனை நிர்மாணித்தே தீருவோம். 

இதனால் சூழல் மாசடையும் என சூழலியலாளர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது சூழல் பிரச்சினைகள் தலையெடுக்கும். 

எனவே சம்பூர் மின்நிலயைத்தை அமைப்பது தொடர்பில் சூழல் விடங்களை ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக் குழுவின் அறிக்கை இன்னும் இருவாரங்களில் கிடைக்கவுள்ளது. 

சம்பூர் அனல் மின்நிலையத்தை அமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் 2008 ஆம் ஆண்டிலேயே உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது. இது தொடர்பில் இந்தியாவுடன் பேசுவதற்கு அவசியமேற்படவில்லை. 

சூழல் தொடர்பான விடயம் தொடர்பிலேயே ஆராயப்பட வேண்டியுள்ளது. குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகும். 

அதேவேளை இதன் இரண்டாம் கட்டத்தை நிர்மாணிப்பதற்கு ஜப்பான் பொறுப்பேற்றுள்ளது. சம்பூர் மின் உற்பத்தி நிலையம் நாட்டுக்கு அவசியம் தேவைப்படுகின்றது.

எனவே இதனை கைவிட முடியாது. எந்தத் தடைகள் சவால்கள் வந்தாலும் அனைத்தையும் வெற்றி கொள்வோம். 

சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தி இத்திட்டம் முன்னெடுக்கப்படும். கடந்த காலத்தில் ஏற்பட்ட மின்சார தடை தொடர்பில் பொலிஸ் அறிக்கை கிடைக்கவில்லை. 

அதேவேளை இது தொடர்பில் ஒருவருக்கொருவர். சுட்டு விரலைக் காட்டி குற்றங்களை சுமத்திக் கொண்டிருக்காது நாமனைவரும் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும். 

எதிர்காலத்தில் சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை பெறுவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது. அதற்கான திட்டங்களை விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம் என்றார்.