நாளைய தினம் நீதிமன்றத்தில் திரையிடப்படவுள்ள மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா கொலை

z_p-07-A fearless defender-1
மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவை இலக்கு வைத்து அனுராதபுரத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்ட போது பதிவான காணொளி நீதிமன்றத்தில் திரையிடப்பட உள்ளது.

சம்பவம் நடைபெற்ற போது அதனை ஒளிப்பதிவு செய்த தொலைக்காட்சி ஊடகவியலாளரிடம் இருந்து பெறப்பட்ட காணொளி நாளைய தினம் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் திரையிடப்பட உள்ளது. 

அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி ரேமா சுவர்ணாதிபதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் மெரில் ரஞ்சித் லமாஹேவாவுக்கு வழங்கிய உத்தரவுக்கு அமைய இந்த காணொளி திரையிடப்பட உள்ளது. 

தாக்குதலில் பலியான அனுராதபுரத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ரஷ்மி மஹ்ருப்பின் வீடியோ கமெராவில் இருந்து எடுக்கப்பட்ட காணொளியின் மூலப் பிரதி, நீதிமன்ற உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த தற்கொலை குண்டு தாக்குதலுக்கு பொறுப்பு என தவறை ஒப்புக்கொண்ட இரண்டாவது குற்றவாளியான புலிகள் அமைப்பின் முன்னாள் கேர்ணல் சண்முகநாதன் சுதாகரனுக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் இதற்கு முன்னர் 20 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது. 

முதலாவது குற்றவாளியான உமர் லெப்பே, அவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 48 குற்றச்சாட்டுகளுக்கு தான் பொறுப்பல்ல, நிரபராதி எனக் கூறியதால், வழக்கு தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது