வடக்கு, கிழக்கு முஸ்லிம் பா.உ. ஒன்றியம் காலத்தின் கட்டாயமாகும்: சேகு இஸ்ஸதீன்

சப்றின்
ஜனநாயக விழுமியங்கள் விஸ்தரிக்கப்பட இருக்கும் அரசியலமைப்பு சீர்திருத்த முன் மொழிவுகளுக்கு, வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தரப்பான அதிகாரப் பரவலாக்கம், அதிகார அலகு தொடர்பான ஆணித்தரமான ஆலோசனைகளை முன்வைப்பதற்கு வடக்கு கிழக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் உருவாக்கப்பட்டு செயற்படவேண்டும் என்று முன்னாள் அமைச்சரும், வடக்கு,கிழக்கு முஸ்லிம் தேசியவாதிகள் முன்னணியின் தலைவருமான சட்டத்தரணி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார். 
Cegu_Fotor
சென்ற செவ்வாய் 16 மாசியில், அக்கரைப்பற்று கடற்கரையில் நடைபெற்ற வட-கிழக்கு முஸ்லிம் தேசியவாதிகள் முன்னணி ‘சுப்ரீம் கொமாண்ட்’ கூட்டத்தில் உரையாற்றிய (North – East Muslim Nationalists Alliance – NEMNA) நெம்னா தலைவர் சேகு இஸ்ஸதீன் மேலும் விபரித்ததாவது: 
வட,கிழக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றியம் ஒரு புது விடயமல்ல நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலங்களில் இவ்வாறானதொரு அமைப்பை உருவாக்கி செயற்பட்டது வரலாறு ஆகும். ஆனால் இன்று அதன்தேவை அதிலும் அதிகமாக உணரப்படுகிறது. வட-கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளை உள்ளூர உணர்ந்து தீர்வைத் தேடி செயற்பட வட-கிழக்கைத் தாயமாகக் கொண்டவர்களாலேயே அதிகம் சாத்தியமாகும். 
இதற்கு அமைச்சர் றிசாட் பதீயுத்தீன் ஒரு நல்ல உதாரணமாகும். அத்தோடு அவர்தான் இன்று வடக்கு முஸ்லிம்களை முற்றாக பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராகவும் இருக்கிறார். சிங்கள, தமிழ் இனவாத சக்திகளின் முஸ்லிம் எதிர்ப்பு கெடுபிடிகளை தனித்து நின்று, துணிந்து முகங்கொடுத்து வடபுல முஸ்லிம்களின் தலையை நிமிர்த்தி வைத்திருப்பவரும் றிசாட் தான். 
கிழக்கின் மூன்று மாவட்டங்களிலுமுள்ள மும்மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் வட-கிழக்கின் தனித்த முஸ்லிம் உறுப்பினரான அமைச்சர் றிசாத் பதீயுத்தீனும் சேர்ந்து பல கட்சிகளையும் சார்ந்த பத்து பராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். 
வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக கட்சி பேதம் கழைந்து செயற்பட்டு ஒரு நிரந்தரமானதும், பிரகாசமானதுமான எதிர்காலத்தை முஸ்லிம்களுக்கு உருவாக்கித்தர வேண்டிய பொறுப்பு இந்த பத்து உறுப்பினர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள காலத்தின் கட்டளையாகும். இந்த வடக்கு, கிழக்கு முஸ்லிம் பா.உ. ஒன்றியத்திற்கு அமைச்சர் றிசாத் பதீயுத்தீனே தலைமை தாங்கி நடத்த தகுதி உள்ளவர். 
எனவே இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தமது கட்சி நலன்களை கருத்திற்கெடுக்காது, சொந்த நலன்களை தூரப்படுத்தி வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காக தியாக உணர்வோடு ஒன்றித்து உழைக்க இந்த வடக்கு, கிழக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தை அமைத்து செயற்படுவது காலத்தின் அறைகூவலாகும். 
முஸ்லிம்களின் தாகம் – சமத்துவ தாயகம்.