”பாகிஸ்தானிலிருந்து நேரடியாக சதொச நிலையத்திற்கு தீர்வையற்ற முறையில் பாஸ்மதி அரிசி” !

 

20160211_120306_Fotor

 

  பாகிஸ்தானிலிருந்து சுங்கத்தீர்வையற்ற முறையில் ஆறாயிரம் மெற்றிக் தொன் பாஸ்மதி அரிசியை கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்திற்கு (சதொச) நேரடியாக வழங்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ரிசாட் பதியுதீனிடம் பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகர் ஸர்பாஸ் அஹமட் கான் ஸிப்ரா இன்று தெரிவித்தார். 

அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கும் பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகருக்கும் இடையில் கைத்தொழில் வர்த்தக அமைச்சில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தகவலை பிரதி உயர்ஸ்தானிகர் வெளியிட்டார். 2002ம் ஆண்டில் இலங்கை – பாகிஸ்தான் வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் 4000 பொருட்களுக்கு வரி விதி விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் பாகிஸ்தான் நாட்டிலிருந்து அதன் உச்சக்கோட்டாவான 6000 மெற்றிக் தொன் பாஸ்மதி அரிசியையும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்திற்கு வழங்குவதற்கு தனது நாட்டின் வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது என்றார். அமைச்சர் ரிசாட் பதியுதீன் மேற்கொண்ட முயற்சியினாலேயே இந்த விவகாரத்தை கையாளும் பாகிஸ்தானின் வர்த்தக அபிவிருத்தி அதிகார சபை இந்த முடிவை எடுத்துள்ளதாக பிரதி உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பாகிஸ்தான் அரசமட்டத்தில் மேற்கொண்ட செயற்பாடுகளை நினைவு கூர்ந்த அவர், அமைச்சருக்கு தனது பாராட்டுதல்களையும் தெரிவித்தார்.

பிரதி உயர்ஸ்தானிகரின் இந்த அறிவிப்புக்கு இலங்கை அரசு சார்பில் நன்றிகளை வெளிப்படுத்திய அமைச்சர் ரிசாட் இலங்கை பாகிஸ்தான் வர்த்தக உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் தமது கருத்துக்களையும் தெரிவித்தார். 

2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற நான்காவது  இலங்கை – பாகிஸ்தான் இணைந்த உத்தியோக பூர்வ கூட்டத்தில் 20002ம் ஆண்டு வரி விதி விலக்களிக்கப்பட்ட பொருட்களில் உள்ளடங்கிய பாஸ்மதி அரிசியின் உச்சளவிலான ஆறாயிரம் மெற்றிக் தொன் அரிசியை பெற்றுக்கொள்ள இலங்கை இணக்கம் தெரிவித்திருந்தது. அப்போது கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் இறக்குமதி செய்யப்பட்ட இந்த அரிசியை வாங்குவதில் ஆர்வம் காட்டாமையினால் பாஸ்மதி அரிசி தனியாருக்கு வழங்கப்பட்டது. இப்போது முழுக்கோட்டாவான இந்த ஆறாயிரம் மெற்றிக் தொன் அரிசியையும் மீண்டும் கொள்வனவு செய்வதற்கு கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் விருப்பம் தெரிவித்ததை அடுத்தே அதற்கு வழங்கப்பட உள்ளது. 

இலங்கையின் உள்ளூர் அரிசி உற்பத்தி 4.8 மில்லியன் மெற்றிக்தொன் ஆகும். அத்துடன் வெளிநாடுகளில் இருந்து பாகிஸ்தான் உட்பட விசேட வகையில் இறக்குமதி செய்யப்படும் அரிசி அடங்கலாக 20000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படுகின்றது. அத்துடன் 2014ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இலங்கை வருடமொன்றுக்கு தலா 2.7 பில்லியன் அரிசி நுகரப்படுகின்றது. 

இதைவிட இலங்கையர் ஒருவர் வருடமொன்றுக்கு 90 – 100 கிலோ கிராம் அரிசியை உணவாக உட்கொள்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.