2 பிரதான கட்சித் தலைவர்களும் புதிய அரசியலமைப்பு அவசியம் என எற்றுக்கொண்டுள்ளனர் !

இன்று அரசியலில் புதிய சிந்திப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக 2 பிரதான கட்சித் தலைவர்களும் புதிய அரசியலமைப்பு அவசியம் என எற்றுக்கொண்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்கல் தொடர்பாக, பாராளுமன்றத்தில் நடைபெற்ற பிரேரணை விவாதத்தின் போது அவர் உரையாற்றினார்.

Sumanthiran_6

அரசியலமைப்பில் பிரிவினவாதம் பற்றி என்ன இருந்தாலும் இனங்களுக்கிடையே பாரிய பிரிவு உள்ளது. ஒரு நாடாக முன்னேற வேண்டுமானால் நாம் இதை விளங்கிக் கொள்ள வேண்டும். அனைத்து இனங்களுக்குமிடையில் சம உரிமை இருக்க வேண்டும். எண்ணிக்கை அடிப்படையில் நிரந்திர பெரும்பான்மையும் நிரந்திர சிறுபான்மையும் இருக்கும் போது, மத்திய அரசாங்கத்திடம் அனைத்து அதிகாரங்களும் இருந்தால் பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனத்தை எப்போதும் கட்டுப்படுத்தும். இதை நிவர்த்தி செய்ய இனங்களுக்கிடையில் சமத்துவமான முறையில் அதிகாரம் பகிரப்பட வேண்டும்.

நீங்கள் எங்களை பொறுத்த வரையில் சரியானதை செய்யாது விட்டால், நாங்கள் ஒன்றும் செய்யாமல் இருப்போம் என்று யோசிக்க முடியாது. அப்படி நடக்காது, நடக்கவுமில்லை. இதனால் தான் எமது இளைஞர் ஆயுதம் ஏந்தினர். ஆனால் நாம் இப்போது அந்த இடத்திலிருந்து அதிக தூரம் வந்திருக்கின்றோம்.

இந்த பிரேரணை அடிப்படையில் புதிய அரசியலமைப்பை உருவாக்க கூறியிருக்கும் நடைமுறை சட்டம் அடிப்படையில் முறையானதாகும். தற்போதைய அரசியலமைப்பில் அது தெளிவாக இருக்கின்றது. இந்த கேள்வியில் தயவு செய்து நேரத்தை வீணாக்க வேண்டாம். இந்த சந்தர்ப்பத்தை நாட்டுக்காக பாவித்து நாட்டின் முன்னேற்றத்துக்காக நடந்து கொள்ளுங்கள் என தனது உரையில் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.