அரசாங்க நிதியில் துஷ்பிரயோகம் செய்துள்ள சஜீத் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை !

அரசாங்க நிதியில் துஷ்பிரயோகம் செய்துள்ள வீடமைப்புத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சமுர்த்தி அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அகில இலங்கை சமுர்த்தி அதிகாரிகள் சங்கம் நேற்று பத்தரமுல்லையில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தது. 

sajith-pre

இதில் கருத்து வெளியிட்டிருந்த சங்கத்தின் செயலாளரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான எஸ்.ஏ.டி. ஜகத்குமார மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்துள்ளார். 

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அரசாங்க நிதியில் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமைச்சரவை அனுமதியுடனேயே அவர் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ள செலவுகளை மேற்கொண்டிருந்தார். 

ஆனாலும் அவர் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவற்றின் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

அதே நேரம் அமைச்சர் சஜித் பிரேமதாச , சமுர்த்தி அமைச்சராக இருந்தபோது பெருந்தொகையான நிதி கையாடப்பட்டுள்ளது. சமுர்த்தி நிதியை அவர் இஷ்டம்போன்று தனது நெருங்கிய நண்பர்களுக்கு அள்ளிக் கொடுத்திருந்தார்.

இது குறித்து சமுர்த்தி அதிகாரிகள் சங்கம் முறைப்பாடு ஒன்றையும் மேற்கொண்டுள்ளது. எனினும் எங்களுடைய குற்றச்சாட்டு குறித்து இன்று வரையும் அமைச்சர் சஜித்திடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. 

அதே நேரம் எங்களுடைய குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்த காரணத்தினாலேயே அமைச்சர் சஜித்திடமிருந்து சமுர்த்தி துறைசார் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது என்றும் ஜகத்குமார தெரிவித்துள்ளார்.