சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் அவசரம் காட்டப் போவதில்லை !

இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இடம்பெற்றதாக கூறப்படும், மனித உரிமை மீறல் தொடர்பில், சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் அவசரம் காட்டப் போவதில்லை, என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Maithri_6_3

இந்திய ஊடகம் ஒன்றுக்கு நேற்று வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யோசனைகளை நடைமுறைப்படுத்துவதில் படிப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இலங்கை அரசாங்கம் இதனை செய்ய வேண்டும் என்று கட்டளையிடப்படவில்லை. எனினும் அரசாங்கம் தேவையான அனைத்தையும் மேற்கொள்ளும் என, அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் நல்லிணக்கம் தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்படுகிறது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகள் குறித்து மற்றுமொரு அமைப்பு செயற்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார். 

இதேவேளை இலங்கையில் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் ஜனவரி 9ம் திகதி பாராளுமன்றத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ளதை நினைவுபடுத்தியதோடு, தேர்தல் காலத்தில் தான் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதில் உறுதியாக இருப்பதாகவும் தௌிவுபடுத்தினார். 

இந்தியாவின் உதவியுடனான 13வது அரசியலமைப்பின் நடைமுறை குறித்து இதன்போது வினவப்பட்டது, இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, வாதவிவாதங்களின் பின்னர் அதனை புதிய அரசியல் அமைப்பில் சேர்த்துக் கொள்வது தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.