நாமல் தனது தந்தை ஆட்சியில் இருக்கின்றார் என்று நினைத்துக் கொண்டு சண்டித்தனம் காட்டுகின்றார் !

ranil_21

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தற்போது ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்பது நாமல் ராஜபக்ஷ போன்றோருக்கு மறந்து போயுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விமர்சித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடலின்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாமல் ராஜபக்ஷ குறித்து மேற்கண்டவாறு விமர்சித்துள்ளார். 

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனது நாடாளுமன்ற உரையின்போது வசீம் தாஜுதீன் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் நாடாளுமன்றத்திலும் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். 

நாமலைக் குறித்தே அவர் அவ்வாறு கூறியதாக தெரிவித்து எதிர்க்கட்சியினர் கடும் ரகளையில் ஈடுபட்டனர். 

அத்துடன் நாடாளுமன்றத்திற்குள் வைத்தே முஜிபுர் ரஹ்மானைத் தாக்கும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். 

இது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆத்திரத்தை கடுமையாக கிளறிவிட்டுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இது குறித்து பிரஸ்தாபித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம் பேணல் குறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

அத்துடன் நாடாளுமன்றத்தினுள் மேற்கொள்ளப்படும் ஒழுக்கமீறல்கள் தொடர்பில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். 

நாமல் ராஜபக்ஷ இப்போதும் அவரது தகப்பன் மஹிந்த பதவியில் இருப்பதைப் போல நினைத்துக் கொண்டு சண்டித்தனம் செய்ய முற்படுகின்றார். 

ஆனால் மஹிந்த அதிகாரத்தில் இல்லை என்பதை நாம் அவர்களுக:கு புரிய வைக்க வேண்டும் என்றும் பிரதமர் ரணில் வலியுறுத்தியுள்ளார்.