ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரங்களில் திருத்தங்கள் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் !

பாரிய நிதி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரங்களில் திருத்தங்கள் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இராஜதந்திர ரீதியில் சில அரசியல்வாதிகள் அரச அதிகாரிகள் மேற்கொண்ட பாரியளவிலான மோசடிகள் தொடர்பில் ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகின்றது.

எனினும் 2010ம் ஆண்டுக்கு முன்னைய காலப்பகுதியில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் தொடர்பில் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டுக்கு முன்னைய காலப்பகுதியில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் மோசடிகள் தொடர்பிலும் விசாரணை நடத்த சந்தர்ப்பம் ஏற்படுத்தும் வகையில் ஆணைக்குழுவின் அதிகாரங்களில் திருத்தம் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதேவெளை 2010ம் ஆண்டுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட பாரியளவிலான மோசடிகள் குறித்து ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

தற்போது கிடைக்கப் பெற்ற இவ்வாறான முறைப்பாடுகளை விசாரணை செய்ய தமது ஆணைக்குழுவிற்கு சட்ட ரீதியான அதிகாரம் கிடையாது என அவர் குறிபபிட்டுள்ளார்.

எனவே முன்னைய காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தக் கூடிய வகையில் ஆணைக்குழுவின் அதிகாரத்தை திருத்தி அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

2010ம் ஆண்டுக்கு முன்னதாக இடம்பெற்றதாக செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் குறித்த அறிக்கை ஒன்றை ஆணைக்குழு விரைவில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.