எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து களமிறங்கவுள்ளது !

உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச போன்றவர்களை நீக்கிவிட்டு முற்போக்கு சிந்தனை கொண்ட தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இணைத்துக் கொள்ளும் என்று இராஜாங்க அமைச்சர் டிலான் பெரெரா தெரிவித்தார்.

முற்போக்கு சிந்தனை கொண்ட அரசியல்வாதியான டலஸ் அழகப்பெருமவும் இந்தக் கூட்டணியிலிருந்து விலகி எம்முடன் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

நாட்டின் அரசியல் நிலைமை மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிலை என்பன குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  அமைச்சர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,

dilan perera

வரலாற்றில் மிகவும் முக்கியமான கட்டத்திலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளன. 

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் நான் மஹிந்த ராஜபக்சவும் மைத்திரிபால சிறிசேனவும் இணைந்த அரசாங்கம் அமையவேண்டும் என்று செயற்பட்டேன். ஆனால் மக்கள் அதனை விரும்பவில்லை. 

நாட்டு மக்கள் மைத்திரி ரணில் அரசாங்கம் அமையவேண்டும் என்று ஆணை வழங்கினர். எனவே ஒருபோதும் மக்களின் ஆணையை மீறி நாம் செயற்பட முடியாது. 

ஆனால் மறுபுறம் மக்கள் ஐக்கிய தேசிய கட்சி தனித்து ஆட்சியமைக்க ஆணை வழங்கவில்லை. எனவேதான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்த அமைத்துள்ளன. 

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள் அதிகமாக கிடைக்கவில்ல

ஆனால் எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து களமிறங்கவுள்ளது. அதில் நாங்கள் அதிகளவாக தமிழ் முஸ்லிம் வாக்குகளை பெறுவோம் என்று நம்புகின்றோம்.

குறிப்பாக உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச போன்றவர்களை நீக்கிவிட்டு முற்போக்கு சிந்தனைகொண்ட தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  இணைத்துக் கொள்ளும். இதன் மூலமே நாங்கள் இந்த செயற்பாடுகளை மேற்கொள்வோம் என்றார்.