கிராம இராஜ்ஜியத் திட்டத்தை த.தே.கூட்டமைப்பினர் எதிர்ப்பதில் எவ்வித அர்த்தமும் கிடையாது !

கிராம இராஜ்ஜியத் திட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்பதில் எவ்வித அர்த்தமும் கிடையாது. இதன் மூலம் வடக்கு, கிழக்கின் தனித்துவம் பேணப்படும். இதனால் வடமாகாண சபைக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று அரசாங்கம் நேற்று அறிவித்தது.
kabir hashim

ஐ.தே.கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம் இவ்வாறு தெரிவித்தார். 

அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில், 

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்தின் கிராம இராஜ்ஜியத் திட்டம் தொடர்பில் வீணான அச்சம் கொண்டுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் முழுமையாக அறியவில்லை. 

எனவே இத்திட்டம் முழுமையாக தாயாரிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும். 

உண்மையில் கிராம இராஜ்ஜியத் திட்டத்தால் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தனித்துவம் பாதுகாக்கப்படும். இதன் மூலம் 2500 குழுக்கள் ஏற்படுத்தப்படும். 

அக் குழுக்களில் பிரதேச சபை, மாகாண சபைகள் உட்பட அனைத்து கிராம மட்டத்திலான வளங்கள் அனைத்தும் இக் குழுக்களுக்கு உள்ளீர்க்கப்படும். 

அதன் பின்னர் குறிப்பிட்ட கிராமங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். அவர்கள் ஊடாக அனைவரது இணக்கப்பாட்டிற்கு அமைய கிராமங்களின் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படும். 

இதுவே கிராம இராஜ்ஜியத்தின் வரையறையாகும். இதனால் வடமாகாண சபையின் நடவடிக்கைகள் பாதிக்கப்படமாட்டாது. 

அது தொடர்பில் வடமாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் எந்தவிதமான அச்சமும் கொள்ளத் தேவையில்லை. 

இத்திட்டம் முழுமையாக தயாரிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும். கிராம இராஜ்ஜியத் திட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தப்படும். என்றார்