அமைச்சர் பைசர் முஸ்தபாவின் சவால் !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு விசுவாசமான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தரப்பிற்கு அமைச்சர் பைசர் முஸ்தபா சவால் விடுத்துள்ளார்.

வேறு புதிய சக்தியொன்றை உருவாக்க முயற்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பின் தரப்புக்கள் முடிந்தால் தனித்து போட்டியிட்டு ஒரு உள்ளுராட்சி மன்றத் தொகுதியிலேனும் வெற்றியீட்டிக் காட்டட்டும் என சவால் விடுத்துள்ளார். 

faizer mustafa

அண்மையில் ஹோமாகம மீகஸ்முல்ல பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சில கட்சிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாகவே நன்மை அடைந்தன, உண்மையில் இதனால் சுதந்திரக் கட்சிக்கு பாதகத்தன்மை ஏற்பட்டது. 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிழலில் பலன் அனுபவித்த தரப்பினர் இன்று புதிய சக்தியொன்றை உருவாக்க முயற்சிக்கின்றனர். 

இவ்வாறு உருவாக்க முயற்சிக்கும் தரப்பினர் முடிந்தால் ஒரு உள்ளுராட்சி மன்றத் தொகுதியிலேனும் வெற்றியீட்டிக் காட்டுமாறு நான் சவால் விடுக்கின்றேன். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடைந்தால் அதன் நன்மை ஐக்கிய தேசியக் கட்சியையே சென்றடையும். 

இந்த புதிய சக்திகள் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றியீட்டச் செய்ய சூழ்ச்சி செய்கின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

சந்திரிக்கா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ச போன்ற ஜனாதிபதிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாகவே உருவாகினார்கள். 

இவர்கள் கட்சி மீது நேசம் வைத்துள்ளார்கள் கட்சி பிளவடைவதற்கு அவர்கள் உதவ மாட்டார்கள் என பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். 

எவ்வாறெனினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் சுதந்திரக் கட்சி தரப்புக்களே உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடும் ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.