ரஷியா வான்வழி தாக்குதலால் சிரியாவில் 39 பேர் பலி!

 

images
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான வான்வழி தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சிரியாவின் வட பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை குறிவைத்து ரஷியா படை குண்டு மழை பொழிந்தது.

இட்லிம் மாகாணத்துக்கு உட்பட்ட மாராத் அல்-நாசான் என்ற இடத்தில் உள்ள எரிபொருளுக்கான சந்தையில், குண்டுகளை வீசியதில், அப்பகுதியில் கூடியிருந்த அப்பாவி பொதுமக்கள் 16 பேர் உடல் சிதறி பலியாகினர். அதை தொடர்ந்து, அலேப்போ மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள ஒரு கிராமத்தை குறிவைத்து நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பெண்கள் உள்பட 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த இரு தாக்குதல்களிலும் படுகாயம் அடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மற்றொரு தாக்குதலாக, மஸ்கானா என்ற கிராமத்தில் உள்ள சந்தை பகுதியில் குண்டுகள் வீசப்பட்டதில், ஐ.எஸ். தீவிரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தகவல்களை சிரியாவின் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.