சவூதி அறிவித்த இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பில் நாங்கள் இடம்பெற்றதே தெரியாது -பாகிஸ்தான் அறிவிப்பு

Unknown

அதிகரித்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளிட்ட தீவிரவாத செயல்களை முறியடிக்க 34 நாடுகளின் ராணுவ வீரர்களை கொண்ட இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பை ஏற்படுத்த சவுதி அரேபியா தீர்மானித்துள்ளது.

ராணுவ பலம்மிக்க பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, லிபியா, ஏமன் உள்ளிட்ட பெரிய நாடுகளும், போகோஹரம் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ள நைஜீரியா, சோமாலியா, மாலி, சாட் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளும் இடம்பெற்றுள்ளன. சவுதியின் அண்டை நாடுகளான குவைத், கத்தார், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அமீரக நாடுகளை உள்ளடக்கிய இந்த படையில் சிரியா, ஈராக், ஈரான், ஓமன் உள்ளிட்ட நாடுகள் இடம்பெறவில்லை. 

இதுதொடர்பான தகவலை உறுதிப்படுத்தும் விதமாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள சவுதி நாட்டின் துணை இளவரசரும் ராணுவ மந்திரியுமான முஹம்மது பின் சல்மான், ‘கூட்டமைப்பின் தலைமை அலுவலகம் ரியாத் நகரில் அமைக்கப்படும். இங்கிருந்தவாறு இஸ்லாமிய உலகின்மீது நடத்தப்படும் தாக்குதல்களை முறியடிக்கும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என தெரிவித்தார். 

இந்நிலையில் சவூதி அரேபியா அறிவித்துள்ள 34 நாடுகளின் ராணுவ வீரர்களை கொண்ட இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பில் ஒப்புதல் இல்லாமலேயே தங்களது நாட்டின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. 

இது குறித்து பாகிஸ்தான் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அனுமதியில்லாமல் போலியாக பெயர்களை சேர்த்து சவூதி அரேபியா வெளியிட்டுள்ள அறிவிப்பு பல்வேறு நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படையில் பாகிஸ்தான் பெயரை சேர்த்திருப்பது குறித்த செய்தியை கண்டு ஆச்சர்யமடைந்ததாக அந்நாட்டு வெளியுறவுச் செயலாளர் அஜிஸ் சௌத்ரி தெரிவித்துள்ளார். 

முன்னதாக ஏமன் மீதான தாக்குதலின் போதும் சவூதி அரேபியா, பாகிஸ்தான் பெயரை அறிவித்து பாகிஸ்தான் கொடியும் கூட்டு மையத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் பாகிஸ்தான் ஏமனுக்கு எதிரான கூட்டுப் படையில் சேர மறுத்து விட்டது. 

ஐக்கிய நாடுகளின் அமைதிக் குழுவை தவிர வேறு எந்த அமைப்பிற்கும் தங்கள் நாட்டு படைகளை அனுப்புவதில்லை என்ற கொள்கையை பாகிஸ்தான் கடைபிடித்து வருகிறது. ஐ.எஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா விடுத்திருந்த அழைப்புகளையும் இரண்டு முறை பாகிஸ்தான் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.