பிலிப்பைன்சை தாக்கியது மெலர் சூறாவளி!

பிலிப்பைன்ஸ் நாட்டின் கிழக்குப் பகுதிகளை இன்று கடும் சூறாவளி தாக்கியது. மணிக்கு சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த இந்த மெலர் சூறாவளி தாக்கியதையடுத்து கடும் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கடலோர பகுதிகளில் 13 அடி உயரத்திற்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சுழன்று அடிக்கும் சூறைக்காற்றில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

images

சுறாவளியின் தாக்கத்தால் மணிக்கு 115 மைல் வேகத்தில் காற்று வீசி வருவதாகவும், 185 மைல் சுற்றளவிற்கு கனமழை முதல் மிக கன மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சூறாவளி நெருங்கி வருவதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்கு மாகாணங்களில் உள்ள சுமார் ஏழரை லட்சம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

40 உள்நாட்டு விமானச் சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. 73 பயணிகள் படகுகளும், நூற்றுக்கணக்கான மீன்பிடி படகுகளும் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.