வசீம் தாஜுதீன் படுகொலை ! சீசீடிவி காட்சிகள் கசிந்தது !

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜூதீன் கொலையுடன் சம்பந்தப்பட்ட சீசிடிவி காட்சிகளின் முக்கிய பகுதிகள் இன்று ஊடகங்களுக்கு கசிந்துள்ளது.

வசிம் தாஜூதீன் 2012ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி இரவு கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, அவரது காருக்குள் போட்டு , நாராஹேன்பிட்டி சாலிகா விளையாட்டு மைதானத்தின் மதில் சுவர் அருகே காருக்கு தீவைத்து, படுகொலை செய்துள்ளதாக ஏற்கனவே நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது 

இந்த சம்பவம் தொடர்பிலான பாதுகாப்பு கெமராக்களில் பதிவான சகல காட்சிகளும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் உள்ளன.  

ராஜபக்ஷ குடும்ப சாரதியான திஸ்ஸ என்பரே இந்த கொலையை செய்துள்ளதாக குறித்த பாதுகாப்பு கெமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் உறுதியாகியுள்ளது. 

திஸ்ஸ என்ற இந்த சாரதி,  தாஜூதீனை ரி.56 ரக துப்பாக்கியால் தாக்குவது பாதுகாப்பு கெமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. 

தாக்கப்பட்ட தாஜூதீன் மார்பை பிடித்து கொண்டு கீழே விழுவது, அப்போது அவர் அருகில் இருந்து விலகிச் செல்லும் திஸ்ஸவின் கையில் இரத்தம் படிந்த ரம்போ ரக கத்தி இருப்பதையும் தெளிவாக காணக் கூடியதாக உள்ளதாக தெரியவருகிறது. 

இதற்கிடையே குறித்த சீசிடிவி காட்சிகளில் இருந்து தாஜுத்தீன் பயணித்த வாகனம் பார்க் வீதியில் வைத்து திஸ்ஸ தரப்பினரால் வழிமறிக்கப்படும் காட்சி,  அதன் பின்னர் அவர் தாக்கப்படும் காட்சி, பின்னர் தாஜுத்தீனை சாரதி இருக்கைக்கு அருகில் உள்ள ஆசனத்தில் இழுத்துப் போட்டு திஸ்ஸ குறித்த காரை ஓட்டிச் செல்லும் காட்சி, பின்னர் கார் சாலிகா மைதான மதில் சுவர் அருகில் நிறுத்தப்படும் காட்சி என்பன தொடர்பான புகைப்படங்கள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. 

அத்துடன் தாஜுதீன் வழிமறித்து தாக்கப்பட்ட இடத்தில் இருந்து,  உயிருடன் எரிக்கப்பட்ட இடம் வரை அவர் காரில் கொண்டு வரப்பட்ட போது இரண்டு டிபெண்டர் வாகனங்கள் குறித்த காருக்கு பாதுகாப்பு வழங்கிச் சென்றுள்ளன. 

பின்னர் தாஜுதீனின் கார் சாலிகா மைதான மதில் சுவர் அருகில் நிறுத்தப்பட்ட பின்னர், முன்னால் இரும்புத் தகடு பொருத்தப்பட்டிருந்த டிபெண்டர் ஒன்றினாலேயே மதில் சுவர் மீது மோதப்பட்டுள்ளது. பின்னர் தாஜுதீனின் காரும் இரண்டு பக்கமாக டிபெண்டர்களால் மோதி நொறுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே குறித்த காருக்குள் அவர் உயிருடன் தீக்கிரையாக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. 

மேலும் இந்த கொலைக்கு உதவியவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்கள் அனைவரும் ராஜபக்ஷ குடுபத்தினருடன் நெருக்கமாக இருக்கும் நபர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

கொலையாளிகள் கொழும்பு -05,  இசிபத்தானை மாவத்தையில் இருக்கும் பிரபல வாகன இறக்குமதியாளர் ஒருவரின் வீட்டில் இருந்தே புறப்பட்டு வந்துள்ளார்கள்.  குறித்த முஸ்லிம் வர்த்தகரின் மனைவி ஒரு காலத்தில் நாமல் ராஜபக்ஷ மற்றும் யோசித்த ராஜபக்ஷ ஆகியோரின் நெருங்கிய தோழியாக இருந்துள்ளார்.  அதன் காரணமாக அவருக்கு கொழும்பு மாநகர சபைக்கான வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. 

எனினும் ஆட்சி மாற்றத்தின் பின் குறித்த பெண் தற்போதைய அரசின் முக்கியஸ்தர்களான சுஜீவ சேனசிங்க மற்றும் ஹரீன் பெர்னாண்டோ ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.  ஹரீனும் நாமலும் நல்ல நண்பர்கள் என்பதும் இருவரும் ஒன்றாக நைட்கிளப்புகளில் பெண்களுடன் காணப்பட்டவர்கள் என்பதும் பிரசித்தமான ரகசியமாகும். 

இதனை வாய்ப்பாகக் கொண்டு குறித்த பெண்மணி, வசீம் தாஜுத்தீன் கொலை தொடர்பான விசாரணைகளில் அரச உயர்மட்டத்திற்கு அழுத்தம் கொடுத்து விசாரணைகளை குழப்பும் நடவடிக்கைகளுக்கு சுஜீவ சேனசிங்க மற்றும் ஹரீன் பெர்னாண்டோ ஆகியோரையும் பயன்படுத்திக் கொள்வதாகவும் தற்போது தகவல்கள் கசிந்துள்ளது. 

இந்த நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனை கிடைத்த பின்னர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் அடுத்த நடவடிக்கையை எடுக்க தயாரான நிலையில் உள்ளதாக காவற்துறை தலைமையக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.