தாஜூடீன் தனது மரணத்தை அறிந்திருந்தார் ?

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் தனது மரணத்தை அறிந்திருந்தார் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரணமான இரவு தாஜூடீனின் வாகனம் பயணித்த சீ.சீ.ரி.வி காட்சிகள் பற்றிய தகவல்களின் அடிப்படையில் உயர்மட்டக் காவல்துறையினர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

தாம் கொலை செய்யப்பட போவதனை உணர்ந்து கொண்ட தாஜூடீன் அதிலிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார்.

தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சீ.சீ.ரி.வி கமராக் காட்சிகளில் தாஜூடீனி;ன் வாகனத்திற்கு நிகரான வாகனத்தை சில வாகனங்கள் பின்தொடரும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

தம்மை துரத்தி வரும் வாகனங்களை தவிர்த்து வேறும் வழியில் செல்ல வசீம் தாஜூடீன் முயற்சித்துள்ளார்.

எனினும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தப்பிச் செல்ல மேற்கொண்ட முயற்சியை சில வாகனங்கள் தடுத்துள்ளன.

தமக்கு காணப்படும் உயிர் அச்சுறுத்தல் குறித்து தாஜூடீன் நண்பர்கள் அல்லது வேறும் தரப்பினருக்கு தொலைபேசி மூலம் அறிவித்திருக்கக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாகவே தொலைபேசி உரையாடல்கள் பற்றிய தகவல்களை திரட்ட நீதிமன்றின் ஒத்துழைப்பை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நாடியுள்ளனர்.

கிருலப்பனை சந்தியில் அமைக்கப்பட்ட சீ.சீ.ரி.வி கமராக்களில் பதிவான காட்சிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

வாகனங்களின் இலக்கத் தகடுகள் மற்றும் வாகனத்தில் பயணித்தவர்கள் பற்றிய விபரங்களில் தெளிவற்ற தன்மை காணப்படுவதாகவும் அது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் புலனாய்வுப் பிரிவனர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.