காத்தான்குடி (தொடர்-05)

காத்தான்குடி (தொடர்-05)
+++++++++++++++++++++

வாடியும் வயலும் மாடும்
கூடிய பணமும் கொண்ட
போடிமார் ஊரின் தலைமை
பொதுவாக இருந்த வழமை.
பள்ளிக்கு மரைக்கார் பதவி
பணமில்லா ஏழைக்கு உதவி
செல்வாக்கு உள்ள போடி
சொல்வாக்கு மீறா ஆண்டார்

ஒவ்வொரு குடிகள் பெயரால்
ஓதுவார் மெளலூது ஊரில்
அவ்வாறு ஓதும் போது
ஆக்கிக் கொடுப்பார் சோறு
அண்டாவில் சோறு ஆக்கி
வண்டியில் அதனை ஏற்றி
பைத்துக்கள் பலவும் பாடி
பவனிகள் வருவார் கூடி.

கல்யாணம் என்பது அன்று
கலையோடு இருந்தது நன்றாய்
பலகார வகைகள் செய்வார்
பல வர்ணப் பாய்கள் நெய்வார்
அழகான பிடவைகள் சுற்றி
அதற்குள் குருத்தோலை கட்டி
பந்தல்கள் ஆண்கள் அமைப்பார்
பசிக்கு பெண்கள் சமைப்பார்

பெற்றோமக்ஸ் வெளிச்சம் வீசும்
பெண்களின் குரவை பேசும்
கடுகு, மாடா வண்ணம்
காரைக்கால் ரெட்டைக் கொழுக்கி
பிடவைகள் பளபள ஜொலிக்கும்
பெண் வீட்டில் மகிழ்ச்சி கொழிக்கும்.

காலுக்கு தண்டை கொலுசு
காதுக்கு அல்லுக் குத்து
மேலுக்கு கொண்ட மாலை
மேனியில் பூ மணி மாலை
பொன்னும் வெள்ளியுமாக
பெண்ணின் வீட்டில் நிறைவார்.

பத்து மணிக்குப் பிறகு
படுத்த ஆண்கள் எழுந்து
அத்தரில் வாசம் வீசும்
அரையடுக்கு சாரண் உடுத்து
தோலினால் வார் அணிந்து
தோள் பூட்டு பெனியன் உடுத்து
குட்டாபட்டி நெமிளி நூலில்
குஞ்சச் சால்வை எடுத்து
ஓலைப் பந்தம்  ஏந்தி
உற்சாகமாக்ச் செல்வார்.

நடுச்சாமம் மாப்பிள்ளை செல்வார்.
நாற்திசை பைத்கள் ஒலிக்கும்.
குடைக்குள்ளே நடக்கும் போது
இடையே வெடிகள் வெடிக்கும்.
பெண்ணின் வீடு அடைய
பெண் வீட்டு சிறுவன் ஒருவன்
தண்ணீரும் தேங்காய்ப்பாலும்
நன்றாக காலில் ஊற்ற
பின்னர் உள்ளே சென்று
பெரிய பாயில் அமர்வார்.

தென்னம் பாளை பூவுடன்
வண்ணமாய் இருக்கும் குடத்தில்.
குத்து விளக்கு மூலையில்
பற்றும் ஏழு திரியுடன்.
சின்ன வயது பெண்ணுடன்
சேர்ந்து சிலரும் இருக்க
முன்னே இருந்த மாப்பிள்ளை
உள்ளே வந்து கழுத்தில்
மெல்லத் தாலி கட்ட
வரிசையாய் அமர்ந்து இருந்தோர்
அரிசிமா ரொட்டி உண்ண
சுபஹுக்கு பாங்கு சொல்ல
சுவையாய் திருமணம் முடியும்.