அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் பருவ மழை நீடிக்கும் : ரமணன் !

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று  மழை தொடர்பாக அளித்த பேட்டி வருமாறு:–

குமரி கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. தற்போது அந்த தாழ்வு நிலை மாலத்தீவு அருகே நிலை கொண்டுள்ளது.

article-mthphfjyvt-1449234706

இதற்கிடையே தென்மேற்கு வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது தொடர்ந்து தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக பாபநாசத்தில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் பருவ மழை நீடிக்கும். பெரும்பாலான உள் மாவட்டங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.

குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்களில் மிக கன மழையை எதிர்பார்க்கலாம்.

சென்னை

சென்னையில் பொதுவாக வானம் மேக மூட்டமாக காணப்படும். இடையிடையே மழை பெய்யக்கூடும்.

சென்னையில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இல்லை.

இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறினார்.