தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் மீண்டும் ஒருவிதமான மந்த நிலை : சி .வி கவலை !

c.v. vigneswaran

 தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் மீண்டும் ஒருவிதமான மந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் காணப்பட்ட வீச்சு இப்போது இல்லை போன்று தோன்றுகின்றது. அரசாங்கம் குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமக்கு உறுதியளித்தவாறு சகல கைதிகளையும் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க வேண்டும். இதுவே எமது நிலைப்பாடு. தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் நினைத்திருந்தால் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். 

ஆனால் ஒரு கையால் கொடுத்து மறுகையால் பறித்துக் கொள்வதை ஒத்ததாக சில அரசியல் கைதிகளை 10 இலட்சம் ரூபா பிணையில் விடுவித்தது எமக்கு மனவேதனையளிக்கின்றது என வடக்கு முதல்வர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.

புதிய அரசாங்கத்தை அமைப்பதில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பங்காளிகளாக செயற்பட்டிருந்தார்கள். நாம் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் அல்ல. அவர்கள் செய்ய வேண்டிய கடமைகளை செய்யவில்லை. என்பதையே நாங்கள் கூறுகின்றோம். மேலும் நல்லிணக்கம் என பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை. நல்லிணக்கத்தை அரசாங்கம் செயலில் காண்பிக்கவேண்டும்.

நாம் அரசாங்கத்திற்கு முட்டுக்கட்டடையாக இருக்கவில்லை. எமது சுமூகமான வாழ்வுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் விடயங்களை அரசாங்கத்திற்கு கூறிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அரசாங்கம் அந்த முட்டுக்கட்டைகள் தொடர்பாக கவனத்தில் எடுக்கவேண்டும்.