கடனை திருப்பி செலுத்தாத மோசடிக்காரர்கள் பட்டியலில் தொழிலதிபர் விஜய் மல்லையா !

1600 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத விவகாரத்தில் “வேண்டுமென்றே பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர்’ என்ற பட்டியலின் கீழ் விஜய் மல்லையாவை  பாரத ஸ்டேட் வங்கி இணைத்துள்ளது.

மதுபானத் தொழிலில் கொடி கட்டி பறந்த விஜய்மல்லையாவின் கிங் ஃபிஷர் விமான நிறுவனம் பல்வேறு காலகட்டங்களில் பின்னடைவைச் சந்தித்து வந்தது. இந்நிலையில் கடந்த 2010-ஆம் ஆண்டில் பாரத ஸ்டேட் வங்கி உள்பட 17 கடன்தாரர்களிடம் ரூ.6,900 கோடியை கிங் ஃபிஷர் நிறுவனம் கடனாகப் பெற்றது.

எஸ்.பி.ஐ – 1,600 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி – 800 கோடி, ஐ.டி.பி.ஐ வங்கி – 800 கோடி, பாங்க் ஆஃப் இந்தியா – 650 கோடி, பாங்க் ஆஃப் பரோடா – 550 கோடி, செண்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா – 410 கோடி, யுகோ வங்கி – 320 கோடி, கார்ப்பரேஷன் வங்கி – 310 கோடி என்ற அளவில் கடன் வழங்கியிருந்தன. மேலும் ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் – 150 கோடி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 140 கோடி, ஃபெடரல் வங்கி – 90 கோடி, பஞ்சாப் சிந்து வங்கி – 60 கோடி, ஆக்சிஸ் வங்கி – 50 கோடி என்ற அளவிலும் கடன் கொடுத்திருந்தன.

அந்த வகையில் கிங்ஃபிஷர் நிறுவனத்திற்கு 900 கோடி ரூபாய் கடன் கொடுத்திருந்த ஐ.டி.பி.ஐ வங்கி, கடன் திரும்ப செலுத்தப்படாததால், பெரும் நஷ்டமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

இதனையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் யுனைடெட் வங்கி, “வேண்டுமென்றே பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர்கள்” என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் விஜய் மல்லையாவையும், கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மற்றும் அதன் மூன்று இயக்குநர்களையும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது பாரத ஸ்டேட் வங்கியும் “வேண்டுமென்றே பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர்கள்” என்ற பட்டியலில் விஜய் மல்லையாவை அறிவித்துள்ளது. கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காகப் பெறப்பட்ட ரூ.7,000 கோடி கடனை திருப்பிச் செலுத்தாததால் பாரத ஸ்டேட் வங்கி தற்போது இவ்வாறு அறிவித்துள்ளது.

வங்கியின் மூத்த அதிகாரிகள் கூறுகையில், விஜய் மல்லையா, அவரது கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், அதன் தாய் நிறுவனமான யுனைடெட் ப்ரீவரீஸ் (யு.பி.) குழுமம் ஆகியவற்றை இந்த பட்டியலில் இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.