ஊழல் நோய் தாக்காதவாறு பணியாற்றுங்கள் : இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு மோடி அறிவுரை !

2013-ம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 169 பேர், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்தனர். இவர்கள் அவரவர் மாநிலங்களில் பணி அமர்த்தப்படாமல், டெல்லியிலேயே உதவி செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடையே பிரதமர் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களை நிர்வகிக்கக் கூடியவர்கள் நீங்கள். அடுத்த 10 ஆண்டுகள் உங்களுக்கு மிகவும் முக்கியமானவை. நாட்டின் ஐந்தில் ஒரு பங்கு மாவட்டங்களில் நீங்கள் பணியாற்றிவிட முடியும்.

modi
இந்தியா, புதிய உயரத்தை எட்டக்கூடிய பொன்னான வாய்ப்பு உள்ளது. நீங்கள் மாற்றத்தின் தூதுவர்களாக இருந்து, இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

பதற்றமும், போராட்டமும் இருந்தால், மாற்றத்தை கொண்டுவர முடியாது. நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு மக்களை இணைக்கிறீர்களோ, அதில்தான் மாற்றம் இருக்கிறது. நாட்டுக்கு பலனளிக்கக்கூடிய ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.

சிலர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு படுத்து விடுவதை பார்த்திருக்கிறோம். வேறு சிலரோ, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படாமல் இருப்பதையும் பார்த்திருக்கிறோம். அதற்கு நோய் எதிர்ப்பு சக்திதான் காரணம். பரம்பரை ரீதியாக வரும் வலிமை, வைரஸ் காய்ச்சலை எதிர்த்து நிற்கிறது.

அதுபோல், நீங்கள் எங்கே சென்றாலும், சோம்பல் நோய் இருக்கலாம், சோர்வு நோய் இருக்கலாம், ஊழல் நோய் இருக்கலாம். இவற்றால் பீடிக்கப்படாதவகையில், நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். வலிமையுடன் இருந்தால், நோய் தாக்கினால் கூட ஒரே ஒரு மாத்திரையால் நோய் குணமாகி விடும். ஒரு மாத்திரையே அவ்வளவு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றால், மனிதர்களால் முடியாதா?

உங்களுக்கு ‘ஈகோ’ இருக்கக்கூடாது. குழுவாக பணியாற்றுங்கள். உங்கள் துறையில் அனுபவம் மிக்கவர்களிடமோ அல்லது ஓய்வு பெற்றவர்களிடமோ யோசனைகளை பெற்று செயல்படுங்கள்.

நாம் எங்கே இருந்தாலும், நமது பொறுப்புகள் என்னவாக இருந்தாலும், நாட்டை முன்னேற்ற வேண்டும் என்று முடிவு செய்து செயல்பட்டால், இந்த நாடு முன்னேறும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.