எவன்காட் சம்பவம் தொடர்பில் தன்னை பிரதமர் கண்டிக்கவில்லை : ராஜித்த !

எவன்காட் சம்பவம் தொடர்பில் கருத்து வௌியிட வேண்டாம் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னிடம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

எவன்காட் சம்பவம் தொடர்பில் கருத்து வௌியிட வேண்டாம் என ரணில் விக்ரமசிங்க சிரேஷ்ட அமைச்சர் ஒருவரை கண்டித்ததாக அண்மையில் சில ஊடகங்களில் செய்திகள் வௌியாகின. 

இதன்படி பிரதமர் தன்னையே இவ்வாறு கண்டித்ததாக சிலர் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்ள முயற்சிப்பதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள ராஜித்த சேனாரத்ன கூறியுள்ளார். 

தான் கடந்த 16ம் திகதி உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வௌிநாடு சென்றிருந்ததாகவும் எவன்காட் அல்லது வேறு எந்தவொரு விடயம் தொடர்பிலும் கலந்துரையாட தான் பிரதமரை சந்திக்கவில்லை எனவும் அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதேவேளை, எவன்காட் சம்பவம் தொடர்பில் தன்னை பிரதமர் கண்டிக்கவில்லை என அண்மையில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.