நிந்தவூர் பொதுச் சந்தையும் பொறுமையிழந்து தெருவிற்கு வந்த வியாபாரிகளும் ?

இன்னும் தீர்வில்லாத் தீர்வுகளும் ! திண்டாடும் பொது மக்களும்

 

 ஏ.ஆர்.அபி அஹமட் 
தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிந்தவூர்ப் பொதுச் சந்தையானது நிந்தவூரின் பிரதான வீதியிற்கு மேற்குத்திசையிலுள்ள பொட்டைக்குளம் எனும் சதுப்பு நிலம் சார்ந்த நெல்வயல் பகுதியில் கடந்த 2010ம் ஆண்டு ஐரோப்பிய யூனியன், நெக்டொப், கடந்த அரசின் புறநெகும திட்டம், பிரதேச சபை நிதி போன்றவற்றின் பங்களிப்புக்களுடன் அழகியதோர் சந்தை அமைக்கப்பட்டு, கடந்த 2011 ஜனவரி 05ந் திகதி மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

 

 

கடந்த 03 ஆண்டுகளாக இப்புதிய சந்தையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த வியாபாரிகள் சிலர் இன்று பொதுச் சந்தையை விட்டு வெளியேறி, பிரதான வீதியின் இரு மருங்கிலும் கூடாரங்களை அமைத்தும், பொட்டிக் கடைகளை உருவாக்கியும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Ma-01_Fotor

இன்னும் சில வியாபாரிகள் நிந்தவூரில் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளான மாந்தோட்டச் சந்தி, அலியாண்ட சந்தி, உசனார சந்தி, தியேட்டரடி, ஜமால் பேப்பர் கடையடி போன்ற பகுதிகளில் புதிய மினிச் சந்தைகளை அமைத்து, வெகு ஜோறாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொது மக்களும் நிறைவாகப் பொருட்களை நுகர்ந்து வருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

 

 

பல இலட்சங்கள் செலவிட்டு புதிதாக அமைக்கப்பட்ட பொதுச் சந்தை நுகர்வோர் இன்றி வெறிச்சோடிக் கிடக்கும் இதேவேளை ஊருக்குள் புதிது புதிதாக உருவாகியுள்ள மினிச் சந்தைகளில் மக்கள் நிரம்பி வழிகின்றனர். வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன.

 

 

ஊருக்கு வெளியே( மக்கள் செறிந்து வாழும் பகுதிக்கு அப்பால்) இருக்கும் பொதுச் சந்தையை விட உள்ளுர் மினிச் சந்தைகளில் அதிகளவிலான மக்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடக் காரணம்
(1). பொதுச் சந்தை பிரதான வீதிக்கு மேற்கே அமைந்துள்ளதால் பிரதான வீதியைக் கடந்து செல்ல வேண்டிய தேவை உள்ளது.

(2). மோட்டார் சைக்கிளில் சென்று பிரதான வீதியைக் கடப்பதானால் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். தலைக்கவசம் அணியத்

Ma-05_Fotor

-02-
தவறுவோர் வீதிப் போக்கு வரத்துப் பொலிசாரின் கெடுபிடிகளுக்கு ஆழாகுவர். பொலிஸ் நிலையத்திற்கும், நீதிமன்றத்திற்கும் அலைய வேண்டிய நிலை உருவாகும். இதனால் வீனான அலைச்சலும், பணவிரயமும் ஏற்படுகிறது.

 

(03).பிரதான வீதி அதிவேகப் பாதையாகக் காணப்படுவதனால் வீதிப் போக்கு வரத்துச் சட்டங்களை அறிந்திராத சாதாரன பொது மக்கள் வீதிகளைக் கடக்கும் போது, அல்லது சட்டதிட்டங்களை மதிக்காமல் கண்மூடித்தனமாக வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளால் மக்கள் விபத்துக்களில் மாட்டிக் கொள்கின்றனர். இவ்வாறு இந்த இடத்தில் சில உயிர்கள் காவுகொள்ளப்பட்டதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

 

(04). இதே வேளை வீதியோரச் சந்தைகள், மினிச் சந்தைகளை விட பொதுச் சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகம் என்றொரு கருத்தும் நிலவுகிறது. இதில் உண்மை இருப்பதாகவும் தெரிகிறது.

Ma-03_Fotor

 

இது போன்ற பல காரணங்களால் நிந்தவூரிலுள்ள அதிகமான பொது மக்கள் பொதுச் சந்தையை வெறுத்து, புதிதாக உருவாகி வரும் மினிச் சந்தைகளில் இலகுவாகப் பொருட்களை நுகர்ந்து வருவதாகத் தெரிவிக்கின்றனர். இதே வேளை மினிச் சந்தைகளில் நியாயமான விலைகளில் பெண்களும், சிறுவர்களும் மிக விருப்போடு பொருட்களை நுகர்ந்து வருகின்றனர்.

 

இவைகளை வைத்துப் பார்க்கும் போது 2010ம் ஆண்டு பல இலட்சங்களோ, அல்லது கோடிகளோ செலவிட்டு உருவாக்கப்பட்ட பொதுச் சந்தைப் பிரதேசம் உண்மையில் மக்கள் செறிந்து வாழாத ஒரு வயல் தரையாகவும், கால் நடைகளின் மேச்சல் தரையாகவுமே காணப்படுகின்றது. இந்த இடத்தில் இப்பொதுச் சந்தை எவ்வளவு பொருத்தம்? என்பதனை இன்று நிந்தவூர் மகா ஜனங்கள் உணர்ந்துள்ளனர்.

 

உண்மையில் இச்சந்தை மக்களின் தேவை கருதி உருவாக்கப்பட்டதை விட யாரோ சிலர் அவர்களின் பைகளை நிரப்பிக் கொள்ள உருவாக்கப்பட்டதாகவும், அவர்களின் சுயநலன் கருதியே இவ்விடம் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவுமே மக்கள் கருத்து வெளியிடுகின்றனர்.

Ma-04_Fotor

மக்களின் இந்தக் கருத்துக்களில் உண்மை இருப்பதாகத் தெரிகிறது. காரணம் அரச சார்பற்ற நிறுவனங்கள் இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் பொது மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வது வழக்கமாகும். அது மாத்திரமின்றி வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்பே ‘திட்டப் பெயர் பலகையில்’ திட்டத்தின் பெயர், நடைமுறைப்படுத்தும் இடம், ஒப்பந்தகாரர் பெயர்,விபரம், நிதித்தொகை, நிதிஒதுக்கீடு செய்வோர் விபரம், பங்காளிகள் விபரம், ஆரம்பிக்கும் திகதி, முடிவுறும் திகதி போன்ற

-03-
விபரங்கள் அடங்கியிருப்பது வழக்கம். ஆனால், நிந்தவூர் பொதுச் சந்தைக்கு முன்னால் இடப்பட்டுள்ள பெயர்ப்பலகையில் திட்டத்திற்கு நிதியுதவி செய்யும்
நிறுவனம், அதன் பங்காளி நிறுவனம் போன்ற விபரத்தைத் தவிர வேறு எந்தத் தகவலும் அதில் இருப்பதாகத் தெரியவில்லை.

 

இதுபற்றி நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீருடன் பல முறை தொடர்புகளை ஏற்படுத்தி, சந்தை விபரங்களை அறிய முயற்சித்தேன். முடியவில்லை!?

 

தற்போது பிரதேச சபையின் அதிகாரத்திலுள்ள செயலாளர் எம்.ஜஃபர் அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டேன். ‘நான் 2013ம் ஆண்டுதான் இப்பிரதேச சபைக்கு வந்தேன். இச்சந்தை 2012ம் ஆண்டு திறக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய விபரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது’ எனத் தெரிவித்தார்.

 

இது குறித்து தொழிநுட்ப உதவியாளர் எம்.முத்தலிப் அவர்களிடம் நேரடியாகக் கேட்டேன். ‘காலங்கடந்து விட்டதால் இதுபற்றிய விபரங்களைத் தேடிப்பார்க்காமல் சொல்ல முடியாது’ எனத் தெரிவித்தார்.

 

தற்போது உள்ளுராட்சி உதவியாளராகப் பணியாற்றும் திருமதி.சல்மா சதாத்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டேன். ‘இச்சந்தையில் உள்ள கட்டிடங்களில் ஒன்று ஐரோப்பிய யூனியன் உதவி, மற்றய ஒன்று நெக்டொப் உதவி, இன்னுமொன்று புறநெகும திட்டத்தினால் கிடைத்தது, 4வது கட்டிடம் பிரதேச சபை நிதியில் கட்டப்பட்டது. நிறுவனங்கள் கட்டடங்களைக் கட்டி முடித்த பின்னர் எம்மிடம் ஒப்படைத்தனரே தவிர, அவர்கள் அதற்குச் செலவிட்ட தொகை விபரங்கள் பற்றி எமக்குத் தெரிவிக்கவில்லை’ எனத் தெரிவித்தார். இது விடயமாக குரல் பதிவு செய்ய முயற்சித்தேன். தன்னுடைய நிறுவனத் தலைவரின் உத்தரவின்றி குரல்பதிவு தர முடியாது என மறுத்து விட்டார்.

 

மேலுள்ள விடயங்களை வைத்து சிந்திக்கும் போது யாரோ? யாரின் நன்மைக்கோ இவைகளை உருவாக்கியுள்ளனர் என்பதும், செலவிட்ட நிதி விபரம் மூடு மந்திரமாக இருப்பதனால் இதில் எங்கோ நிதிமோசடி இடம் பெற்றிருக்கலாமென மக்கள் பேசிக் கொள்வதில் நியாயமுள்ளது.

 

பொதுச் சந்தையை விட மினிச் சந்தைகளில் வியாபாரம் சிறப்பாக நடைபெறுவதை அறிந்த பொதுச் சந்தையிலுள்ள கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, வெட்டுமீன், தேநீர்க் கடை போன்றவற்றின் ஏனைய வியாபாரிகள் ஒன்று சேர்ந்து இச்சந்தைக்குப் பொது மக்கள் வருகை குறைவாக இருப்பதனால் தாம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெரும் கடன் சுமைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, ஊரின் பல

-04-
இடங்களில் செயற்பட்டுவரும் மினிச் சந்தைகளை நிறுத்த வேண்டும், இல்லையேல் தமக்கும் பழைய இடத்தில் அல்லது வேறு பொருத்தமான
இடத்தில் சந்தை அமைத்துத் தரவேண்டும் என பிரதேச சபையிடம் முறையிட்டனர்.

Ma-10_Fotor

இதனால் பிரதேச சபைச் செயலாளர் பொலிசாரின் உதவியோடு வீதியோர மினிச் சந்தைகளை மூடுவதற்கு பல முறை பல பிரயத்தனங்களை மேற்கொண்டார். இதனால் மினிச் சந்தை வியாபாரிகளுக்கும், பிரதேச சபை உத்தியோகத்தர்களுக்கும், பொலிசாருக்குமிடையில் முறுகல் நிலை உருவானது. இவ்வேளையில் ஒரு மீன் வியாபாரி ‘ தன்னுடைய இந்தத் தொழிலைத் தடுத்தால் தான் தீக்குளிக்கப் போவதாகக் கூறி ‘ பெற்றோல் கலனுடன் காணப்பட்டார்.

இவ்வாறான சூழலில் கடந்த 2015.10.04ந் திகதி பொலிசார், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர், உள்ளுராட்சி மன்ற உத்தியோகத்தர்கள், பொதுச் சந்தை, மினிச் சந்தைகளில் வியாபாரங்களில் ஈடுபட்டுள்ள மீன்வியாபாரிகள், மற்றும் ஏனைய வியாபாரிகள் போன்றோரைப் பிரதேச சபைக்கு அழைத்து ஒரு சமரச முடிவுக்கு வந்ததாகவும், அதனால் தற்போது ஊரிலுள்ள மினிச் சந்தைகள் தடுக்கப்பட்டுள்ளதாகவும், எல்லோரும் பொதுச் சந்தைக்கு வந்து தமது தேவைகளைப் பூர்த்தி செய்து வருவதாகவும், தற்போது பொதுச் சந்தையில் மட்டும் வியாபார நடைமுறை சுமுகமாக நடைபெறுவதாகவும் பிரதேச சபைச் செயலாளர் எம்.ஜஃபர் தெரிவித்தார்.( குரல் பதிவும் தந்துள்ளார் ).

ஆனால். இன்னும் (இன்றும்) கூட பிரதான வீதி இருமருங்குகளிலும் மீன் வியாபாரம், மரக்கறி, பழவகை, பாட்டா வகை, விளையாட்டுப்
பொருட்கள் போன்ற பலசரக்கு வியாபாரம் நடைபெறுவதைக் காணக் கூடியதாக இருப்பதோடு, பல மீன் வியாபாரிகள் தமது பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.

யார் எதைத்தான் சொன்னாலும் சில உண்மைகளை உரியவர்கள் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
நிந்தவூரிலுள்ள பெரும்பாலான மக்கள் புதிதாக அமைக்கப்பட்ட பொதுச் சந்தைக்குச் சென்று பொருட்களை நுகர்வதை விட, உள்ளுருக்குள் அமைந்துள்ள மினிச் சந்தைகளில் பொருட்களைக் கொள்வனவு செய்வதையே அதிகம் விரும்புகின்றனர் என்பதும், அதிகமான வியாபாரிகளும் இதனையே விரும்புகின்றனர் என்பதும் எவராலும் மறுக்க முடியாத ஓர் உண்மையாகும்.
பல இலட்சங்களை, அல்லது கோடிகளைச் செலவிட்டுக் கட்டிய இப்புதிய சந்தைக் கட்டிடம் பொது மக்கள் செறிந்து வாழாத ஒரு

-05-
ஒதுக்குப் புறத்தில் அமைந்துள்ளதாலும், ஊருக்குள் தமது காலடிகளில் வியாபாரிகள் பொருட்களைக் கொண்டு வந்து, நியாய விலைகளில்
விற்பதாலும் பொதுச் சந்தை வியாபாரிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் இன்னுமொரு உண்மையாகும்.
இப்பொதுச் சந்தை அமைக்கப்படுவதற்கு முதல் அரச சார்பற்ற நிறுவனங்கள் நிந்தவூர் பொது மக்களின் அபிப்பிராயங்களைப் பெற்றிருக்க வேண்டும். இதே வேளை அப்போதிருந்த அரசியல் தலைமைகள் ஒற்றுமையாக செயற்பட்டு, அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வழி காட்டியிருக்க வேண்டும்.
இன்னும் 42.9 ஸ்கெயார் கிலோ மீற்றர் பரப்பளவையும், 25 கிராம சேவகர் பிரிவுகளையும் கொண்டு, பரந்து விரிந்த நிந்தவூர் பிரதேசத்தில் வாழும் சுமார் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாவனைக்காக ஒரு சந்தை மட்டும் போதாது. ( இவ்விமர்சனக் கட்டுரையை எழுதும் நான் சின்னவனாக இருக்கும் போது நமது நிந்தவூர் ஜும்ஆப் பெரியபள்ளிவாசல் காணியில் பொதுச் சந்தை இருந்த அதே வேளை, ஆலையடித்தைக்கா ( தற்போதைய மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் வளவில்- அறபா வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள பள்ளிவாசல் காணியில் ) இன்னுமொரு சந்தை ‘பெண்கள் மார்க்கட்’ என்ற பெயரில் சிறப்பாக இயங்கி வந்தது எனக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது. அப்போது நிந்தவூரில் ஒரே ஒரு ஜும்ஆப்பள்ளி வாசல் மாத்திரம் தான் இருந்தது. ஆனால் இன்று காலத்தின் தேவை கருதி 04 பள்ளிவாசல்கள் ஜும்ஆத் தொழும்பள்ளிவாசல்களாக மாற்றப்பட்டுள்ளன. ஏன் சந்தை மட்டும் காலத்தின் தேவை கருதி அதிகரிக்கப்படாமல் குறைக்கப்பட்டுள்ளது? எனவே மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பெண்கள், சிறுவர்கள், அரச உத்தியோகத்தர்கள் மாலை வேளையிலும் பொருட்களைக் கொள்வனவு செய்யக் கூடியவகையில் பொருத்தமான இடங்களில் ஒன்றோ, அல்லது இரண்டோ மினிச் சந்தைகள் உருவாக்கப்படுவது காலத்தின் தேவையாகும்.
இவ்வாறு செய்வதன் மூலம் பொது மக்கள் நன்மை அடைவதுடன் வியாபாரிகளின் வாழ்வும் வழம் பெறும் என்பதில் ஐயமில்லை. இதனை விட்டு விட்டு பொலிசாருடனோ அல்லது பிரதேச சபை உத்தியோகத்தர்களுடனோ வியாபாரிகள், அல்லது பொது மக்கள் முரண்படுவதில் அர்த்தமில்லை.

பிரதேச சபையில் கடமையாற்றும் செயலாளர், முகாமைத்துவ உதவியாளர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், அங்கு பணியாற்றும் ஊழியர்களில் அதிகமானவர்கள் வெளிஊர்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நமதூரிற்குத் தொழில் நிமிர்த்தம் வருகை தருவோர். நம்மால்

-06-
கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். நமது பிரச்சினைகள் எல்லாவற்றையும் அவர்களினால் தீர்த்து வைக்க முடியுமென்று நினைப்பது நமது தவறாகும்.

அரச உத்தியோகத்தர்கள் அவரவர் வரையறைகளுக்குட்பட்ட பிரச்சினைகளையே தீர்த்து வைப்பர். பொதுச் சந்தை வியாபாரிகள் பாதிக்கப்படுவதால், சட்டப்படி அனுமதியில்லாது தெருவோரங்களிலும், மினிச்சந்தைகளிலும் வியாபாரத்தில் ஈடுபடுவோரைத் தடுக்குமாறு கோரினால் பொலிசாரின் உதவியைக் கொண்டு தடுப்பதற்கே பிரதேச சபை உத்தியோகத்தர்களுக்கு முடியும். ஆனால், புதிதாய் அமைக்கப்பட்டிருக்கும் பொதுச் சந்தை பொருத்தமில்லை. எனவே, எமக்கு பொருத்தமான இடத்தில் வேறு சந்தை அமைத்துத் தாருங்கள், அல்லது அமைக்கப்பட்ட பொதுச் சந்தை இயங்குவது போல் இயங்க, இன்னும் சில மினிச்சந்தைகளை மக்கள் செறிந்த வாழும் பகுதிகளில் அமைத்துத் தாருங்கள் போன்ற பிரச்சினைகளை மக்கள், அல்லது வியாபாரிகள் பிரதேச சபையிடம் முன்வைக்கும் போது இது உத்தியோகத்தர்களால் மட்டும் தீர்த்து வைக்கக் கூடிய ஒன்றல்ல.

இவ்வாறான பிரச்சினைகளை நமது அரசியல் தலைமைகள் தான் செய்து முடிக்கத் திராணியுள்ளவர்களாகக் காணப்படுகின்றனர். தேர்தல் காலங்களில் சமூகநலனைக் காப்பதற்காகவே தாம் தோன்றியுள்ளதாகக் கூறி நமது வாக்குகளால் பாராளுமன்றக் கதிரைகளையும், அமைச்சுக்களையும் பெற்று அலங்கரிக்கின்ற நமது அரசியல் தலைமைகள் இந்த பொதுச் சந்தை விடயத்தில் ஏன் இன்னும் மௌனம் சாதிக்கின்றனர்? இதனால் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகளும், மக்களும் நமது சமூகத்தவர்கள் இல்லையா? அல்லது இப்பிரச்சினை நமது சமூகம் சார்ந்ததில்லையா? இல்லை, இவர்கள் யாரும் உங்கள் அரசியலுக்கு உதவவில்லையா? அல்லது, இவர்கள் எக்கேடுகெட்டுப் போனாலும் உங்களுக்கு ஒன்றுமில்லையா? இனிவரும் காலங்களில் சமூகநலனைச் சொல்லி வாக்குக் கேட்காமல் வேறு வியூகங்களைத் தலைவர் ஹக்கீம் வகுத்து வைத்திருக்கின்றாரா? போன்ற கேள்விகளைப் பாதிக்கப்பட்ட மக்கள் கேட்கின்றனர்.

எனவே, இந்தச் சந்தை விடயத்தில் நிந்தவூர் ஜும்ஆப்பள்ளி வாசல் நிருவாகம், சுகாதாரப் பிரதி அமைச்சர் பைசால் காசீம், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீ. ல.மு.கா. செயலாளர் நாயகமுமான ஹசன் அலி, மாகாண சபை உறுப்பினர் ஆரீப் சம்சுதீன், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் தாஹீர், ஊர்த்தனவந்தர்கள், கல்விமான்கள், பொதுத் தொண்டர் நிறுவனங்கள் போன்றோர் கூடிய கவனஞ் செலுத்தி இப்பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டுமென்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.