தாஜ்மகால் அழகில் சொக்கிப்போன பேஸ்புக் நிறுவனர் மீண்டும் இந்தியா வர விருப்பம் !

mark-zuckerberg-taj-mahal-india

 ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தின் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க் சமீபத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் ஆக்ராவில் உள்ள உலக அதிசயமான தாஜ்மகாலை கண்டு வியந்தார். இது தொடர்பாக டெல்லி ஐ.ஐ.டி. மாணவர்களிடம் அவர் கூறும்போது, “தாஜ்மகாலுக்கு சென்ற அனுபவம் எப்படி இருந்தது என்று கேட்கிறீர்கள். வியப்பு அளிக்கிறது. படத்தில் பார்ப்பதை விட நேரில் பார்க்க அபாரமாக இருக்கிறது” என உருகினார்.

இந்த நிலையில், தாஜ்மகாலை சுற்றிப்பார்த்தபோது எடுத்த படங்களை அவர் ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், “தாஜ்மகாலை வலம் வந்தபோது எடுத்த கடைசி படம் இது” என ஒரு படத்தில் குறிப்பிட்டிருப்பதுடன், “நான் விரைவில் மீண்டும் இந்தியாவுக்கு வருவேன். என்னால் காத்திருக்க முடியாது” என கூறி இருக்கிறார்.

இது ’பேஸ்புக்’ வலைத்தளத்தில் ஏகோபித்த வரவேற்பை பெற்று விட்டது. 6 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ‘லைக்’ தெரிவித்துள்ளனர். 8,400 பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 4,689 பேர் அந்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.