125 மில்லியன் ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்ற 3 சுங்க அதிகாரிகள் !

பாரிய அளவில் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் சுங்க அதிகாரிகள் மூவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

125 மில்லியன் ரூபாய் பணத்தை இவர்கள் இலஞ்சமாக பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது என, ஆணைக்குழுவின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை இலங்கை வரலாற்றிலேயே அதிகளவாக பெறப்பட்ட இலஞ்சத் தொகை இதுவென கூறப்படுகின்றது. 

fcpa
மேலும் சுங்க அதிகாரி சுஜீவ பராகிரம ஜூனதாஸ, பிரதி சுங்க அதிகாரி ஜகத் குணதிலக, உதவி சுங்க அதிகாரி எம்.டீ.யூ.ஜீ. பெரேரா ஆகியோரே இவ்வாறு கைதாகியுள்ளனர். 

வௌிநாட்டு நிறுவனம் ஒன்று இலங்கை போக்குவரத்து சபைக்காக கொண்டு வந்த சில பொருட்களை விடுவித்த பின்னர் 1500 மில்லியன் ரூபாய் வழங்க வேண்டும் என குறித்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கூறியுள்ளனர். 

குறித்த பணத்தை சட்டப்படி வழங்க தேவையில்லையே என அந்த நிறுவன அதிகாரிகள் தெரியப்படுத்தியுள்ளனர். பின்னர் மீதமுள்ள பொருட்களை விடுவிக்க 150 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து நிறுவன அதிகாரிகள் இலஞ்ச ஊழல் அதிகாரிகளுடன் பேசியதன் பின்னர் 125 மில்லியன் ரூபாவாக குறித்த தொகையை குறைத்துள்ளனர். 

பின்னர் கொழும்பில் வைத்து பணத்தை கைமாற்ற முற்பட்ட போது இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் இவர்களை கைதுசெய்துள்ளனர்.