நேபாளத்தில்; வரும் ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் புதிய பிரதமர் தெரிவு !

நேபாளத்தில் புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தை ஏழு மாகாணங்களாக பிரிக்க இந்த புதிய அரசியல் சாசனத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட சமுதாயம் பாதிப்படைவதாக கூறப்படுகிறது.

images

ஆகவே, அந்த சமுதாயம் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறது. இதற்கிடையே பிரதமராக இருந்து சுஷில் கொய்ராலா தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆகவே, புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பணியில் நேபாளம் இறங்கியுள்ளது.

நேபாளத்தில் புதிய பிரதமரை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகளுக்குள் ஒருமித்த கருத்து ஏற்படாததால், வரும் ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மை வாக்கு அடிப்படையில் நேபாள பிரதமரை தேர்வு செய்யும் நடமுறைகளுக்கு அந்நாட்டு அதிபர் ராம்நரன் யாதவ் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அரசியல் கட்சிகளுக்கு இடையேயான ஒருமித்த கருத்தில் பிரதமரை தேர்வு செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து, பெரும்பான்மை வாக்கெடுப்பு அடிப்படையில் தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பை நடத்துமாறு அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற பிரநிதிகளை ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பான தகவல் ஜனாதிபதி அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் பாராளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று நேபாள பாராளுமன்ற சபாநாயகர் சுபாஸ் நெம்பங் தெரிவித்துள்ளார். பிரதமர் பதவிக்கான பெயர்களை அங்குள்ள கட்சிகள் நாளை சமர்பிக்கவுள்ளன.