நீண்ட கால அரசியல் பயணத்தின் பின்னர் நாளை கிழக்கு மாகாண சபை உறுப்பினராகின்றார் !

பி.எம்.எம்.ஏ.காதர்
நீண்டகாலமாக அரசியலில் பயனித்து வந்த இலங்கைக்கான சவூதிஅரேபிய தூதுவராலய மக்கள் தொடர்பு அதிகாரி சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எல்.எம்.மாஹிர் நாளை செவ்வாய்க்கிழமை (22-09-2015)கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்கின்றார்.

11863240_1478731515776295_666474452136046533_n
பிறப்பு
கல்முனைக் குடியைச் சேர்ந்த இப்றாலெப்பை சம்மாந்துறையைச் சேர்ந்த அவ்வா உம்மா தம்பதிக்கு 5வது மகனாக 1963 ம் ஆண்டு ஜூன் மாதம் 20ம் திகதி சம்மாந்துறையில் பிறந்தவர்தான் மாஹிர் இவரோடு இவரது உடன் பிறப்புபக்கள் ஐந்து பெண்களும் மூன்று ஆண்களுமாவர்.
கல்வி
இவர் ஆரம்பக் கல்வியை சம்மாந்துறை பெண்கள் வித்தியாலயத்திலும்,இடைநிலைக் கல்வியை சம்மாந்துறை மத்திய மகாவித்தியாலயத்திலும் கற்றுள்ளார்.உயர் கல்வியை யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகஜன கல்லூரியிலும்,மட்டக்களப்பு சென்மைக்கல் கல்லூரியிலும் கற்றுள்ளார்.
1984ம் ஆண்டு தொடக்கம் 1991ம் ஆண்டு வரை பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கற்று விஞ்ஞாப்பட்டதாரியானார்.அதன் பின்னர் 1993ம் ஆண்டு கொழும்பு பல்கலைக் கழகத்தில் ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியையும் பூர்த்தி செய்துள்ளார்.
மேலும் சர்வதேச கற்கைகளுக்கான பண்டார நாயக்க நிலையத்திலும்,கொழும்பு பல்கலைக் கழகத்திலும், வர்த்தக முகாமைத்துவத்துக்கான கற்கை நிறுவனம் ஆகியவற்றிலும் பல கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்துள்ளார்.
தொழில்
1993ம் ஆண்டு தொடக்கம் 1994ம் ஆண்டு வரை சுற்றுலா கைத்தொழில் துறை அமைச்சில் நிறைவேற்று அதிகாரியாகவும்,வெளிநாட்டு அமைச்சு ஐக்கிய நாடுகள் பிரிவின் மனித உரிமைகள் ஆராச்சி உத்தியோகத்தராகவும் கடமையாற்றி 1995ம் ஆண்டு தொடக்கம் இலங்கைக்கான சவூதிஅரேபிய தூதுவராலய மக்கள் தொடர்பு அதிகாரியாக கடமையாற்றிவருகின்றார்.
அரசியல்
1990ம் ஆண்டகளில் இருந்து அரசியல் நடவடிக்கைகளில் அவ்வப்போது ஈடுபட்டாலும் 2008ம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு 15.000 திற்கும் மேற்பட்ட வாக்ககளைப் பெற்ற போதிலும் வெற்றி கிடைக்காமல் போனது.
மீண்டும் 2012ம் ஆண்டில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில்; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு 18.000 திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றும் வெற்றி கிடைக்கவில்லை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் நான்கு பேர் தெரிவு செய்யப்பட்டனர் மாஹிர் ஐந்தாவது இடத்தில் இருந்தார்.
2012ம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த சம்மாந்துறை எம்.ஐ.எம்.மன்சூர் அண்மையில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது மாகாண சபை உறுப்பினர் பதவியையும்,அமைச்சுப் பதவியையும் இராஜினாமாச் செய்திருந்தார்.
இந்த இராஜினாமாவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே ஐந்தாவது இடத்தில் இருந்த ஐ.எல்.எம்.மாஹிர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் சிபாரிசு செய்யப்பட்டு இன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்கின்றார்.
சமூகசேவை
ஐ.எல்.எம்.மாஹிர் இனமத பேதமின்றி தனது சொந்த நிதியின் மூலமாக ஏழை மக்களுக்கு பலவேறுபட்ட உதவிகளைச் செய்து வருகின்றார் ஏழை மக்களோடு நல்லுறவைப் பேணிவரும் இவரது மக்கள் சேவை அளப்ரியதாகும்.
பின் தங்கிய பிரதேச மக்கள் எதிர்கொண்ட பல பிரச்சினைகளுக்கு நிரந்தரத் திர்வுகளை இவர் பெற்றுக் கொடுத்துள்ளார்.தன்னை நாடி வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பொற்றுக் கொடுப்பதில் மாஹிர் ஒருபோதும் பின் நிற்பதில்லை என்பது மாஹிரிடமுள்ள சிறப்பம்சமாகும். சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனிநபராக இவர் செய்த சேவைகளை யாரும் மறக்க முடியாது.
அரசில் மூலம் மக்களுக்கான இவரது பணி இன்னும் விரிவடைய வேண்டும் என்பதே மக்களின் பிரார்த்தனையாகும்.